உள்ளே பேச்சுவார்த்தை.. வெளியே மண்டை உடைப்பு! அதிமுக, அமமுக தொண்டர்கள் மோதலால் மதுரையில் ஷாக்!
மதுரை: மதுரையில் என்.டி.ஏ கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து, ஹோட்டலில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது ஹோட்டலுக்கு வெளியே அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டதில் ஒருவருக்கு மண்டை உடைந்துள்ளது.
வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அது மோதலாக மாறிய நிலையில், அமமுக-வைச் சேர்ந்த நபரின் மண்டை உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, மதுரை மண்டேலா நகர் பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நேற்று தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற இந்த பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த பொதுக்கூட்டம் முடிவடைந்த பின்னர், மதுரையில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சரும் தமிழக பாஜகவின் தேர்தல் மேலிடப் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் முன்னிலையில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களான டிடிவி தினகரன், அன்புமணி, நயினார் நாகேந்திரன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் உடன்பாடு எட்டப்படவில்லை. பிரதமர் மோடி வருகைக்கு முன்பே, என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில், மோடி 2 முறை தமிழகம் வந்த பின்னும் இன்னும் தொகுதிப் பங்கீடு நிறைவடையவில்லை. இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிக சீட்களை பெற முயற்சி செய்து வருகிறார். அமமுக கட்சிக்கு தகுதியான தொகுதிகளை கௌரவமான முறையில் பெறுவதற்கு பாஜக மூலம் முயற்சி செய்வோம். பாஜக வலியுறுத்தல் படி அமமுக செயல்படும். அதன்படியே, அதிமுக கூட்டணியில் நாங்கள் இடங்களை பெற்று, அமமுக வேட்பாளர்களாக போட்டியிடும் நபர்கள் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வார்கள் எனக் கூறியுள்ளார் தினகரன்.
அமமுக திடீரென அதிமுக கூட்டணியில் இணைந்தது அக்கட்சித் தொண்டர்களுக்கே அதிர்ச்சிகரமான விஷயம். எடப்பாடி பழனிசாமியை துரோகி எனக் கூறி வந்த டிடிவி தினகரன், அவருடனே தற்போது கைகோர்த்ததால் அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் அவரிடமிருந்து விலகி உள்ளனர். அமமுக - அதிமுக கூட்டணியில் சேர்ந்தாலும், களத்தில் இரு கட்சியினர் இடையே முரண்பாடுகள் தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில் தான் நேற்று மதுரையில் நடந்த என்.டி.ஏ கூட்டணியின் பொதுக்கூட்டத்திற்குப் பிறகு சிந்தாமணி பகுதியில் உள்ள ஹோட்டலில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது ஹோட்டலுக்கு வெளியே அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அமமுகவை சேர்ந்த ஒருவருக்கு மண்டை உடைந்துள்ளது. ஹோட்டலுக்குள் கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கும்போதே, வெளியில் கூட்டணி கட்சியினர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications