டங்ஸ்டன் சுரங்கம் ரத்து! மதுரை அரிட்டாப்பட்டியில் பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்
மதுரை: மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் எடுக்கும் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு அரிட்டாப்பட்டி மக்கள் இன்று பாராட்டு விழா நடத்துகிறார்கள். இந்த விழாவில் முதல்வரும் கலந்து கொள்கிறார்.
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த நாயக்கர்பட்டி, அரிட்டாப்பட்டி பகுதியில் 4,981 ஏக்கர் நிலத்தில் டங்ஸ்டன் கனிமத்தை எடுப்பதற்கு ஆய்வுடன் கூடிய சுரங்க உரிம குத்தகைக்கு மத்திய சுரங்க அமைச்சகம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏல அறிவிப்பை வெளியிட்டது.

இந்த உரிமத்தை பெற பல்வேறு நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில் வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங் நிறுவனத்திற்கு கடந்த நவம்பர் மாதம் உரிமம் வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தை அரிட்டாப்பட்டி, நாயக்கர்பட்டி உள்ளிட்ட 50 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் கடுமையாக எதிர்த்தனர். இந்த திட்டத்தை கைவிடக் கோரி போராட்டங்களையும் நடத்தினர். 50 கிராம மக்கள் எதிர்ப்பை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை ரத்து செய்யுமாறு தமிழ்நாடு அரசும், மத்திய அரசை வலியுறுத்தியது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு நவம்பர் மாதம் 29ஆம் தேதி கடிதம் எழுதினார். கடந்த 9ஆம் தேதி தமிழ்நாடு சட்டசபையில் டங்ஸ்டன் கனிமச் சுரங்க திட்டத்தை ரத்துச் செய்யக் கோரி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
தமிழக பாஜகவும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நின்றது. மாநில தலைவர் அண்ணாமலையும் அந்த பகுதி விவசாயிகளுடன் பேசி திட்டத்தை ரத்து செய்ய துணை நிற்பதாக கூறியிருந்தார். அது போல் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை அண்ணாமலை தலைமையிலான குழு சந்தித்து பேசினர். இதையடுத்து டங்ஸ்டன் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
ஆனால் இந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய கோரி கிராம மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து ஊர் பெரியவர்களுடன் அண்ணாமலை, டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்திக்க வைத்தார். அப்போது பிரதமர் மோடியுடன் இது தொடர்பாக பேசி நல்ல முடிவை தெரிவிப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு கடந்த 2 தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. போராட்டம் வெற்றி பெற்றதை அடுத்து மக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
அது போல் டெல்லி சென்ற குழுவினருக்கும் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்ததற்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
அது போல் அரிட்டாப்பட்டியில் இன்று நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு முதல்வருக்கும் அழைப்பு விடுத்தனர். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் இன்று அரிட்டாப்பட்டிக்கு முதல்வர் செல்கிறார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: உங்கள் அன்பை ஏற்க நாளை (இன்று) அரிட்டாப்பட்டிக்கு வருகிறேன் என ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று குடியரசு தின விழாவை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் அரிட்டாப்பட்டி செல்கிறார்.












Click it and Unblock the Notifications