திருப்பரங்குன்றத்திற்கு யார் MLA...? மாவட்ட ஆட்சியரிடம் சென்ற பஞ்சாயத்து.. சிக்கலில் அதிகாரிகள்..!
மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதியில் ராஜன் செல்லப்பாவை வைத்து அரசு நிகழ்ச்சி நடத்திய விவகாரம் பூதாகரமாகியுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் திமுகவை சேர்ந்த டாக்டர் சரவணன். இந்நிலையில் அவருக்கே தெரியாமல் அவரது தொகுதியில் மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.ராஜன் செல்லப்பா அரசு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இன்னொரு தொகுதியின் எம்.எல்.ஏ. எப்படி தனது தொகுதிக்குள் வந்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என்றும் ராஜன் செல்லப்பா ஒன்றும் அமைச்சர் கிடையாது எனவும் ஆட்சியரிடம் நியாயம் கேட்டிருக்கிறார் சரவணன் எம்.எல்.ஏ. புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் அன்பழகனும் இது பற்றி விசாரிப்பதாக கூறியிருக்கிறார்.
மேலும், தொகுதி எம்.எல்.ஏ.வான தனக்கு அழைப்பு விடுக்காமல் அடுத்த தொகுதியின் எம்.எல்.ஏ.வை அழைத்ததற்காக இரண்டு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் கூறியிருக்கிறார் சரவணன். இதனால் திருப்பரங்குன்ற ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியனும், ஆணையர் ஆஷிக்கும் இப்போது சிக்கலில் உள்ளனர்.

ராஜன் செல்லப்பா ஏன் தனது தொகுதியை விடுத்து அடுத்தவர் தொகுதிக்குள் சென்று அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என விசாரித்ததில், அவர் வரும் சட்டமன்றத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் எண்ணத்தில் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. இதன் காரணமாகவே தனது மதுரை வடக்கு தொகுதியைக் காட்டிலும் திருப்பரங்குன்றம் தொகுதிக்குள் அவர் அதிகம் உலா வருகிறார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே தனக்கு தகவல் தெரிவிக்காமல், அழைப்பு விடுக்காமல் தனது தொகுதிக்குள் நடந்த அரசு நிகழ்ச்சிக்கு மற்றொரு தொகுதியின் எம்.எல்.ஏ.வை அழைத்த விவகாரத்தை தன்மானப் பிரச்சனையாக கருதுகிறார் சரவணன் எம்.எல்.ஏ. இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு பாரபட்சமாக செயல்படும் 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றம் செல்வோம் என சரவணனின் வழக்கறிஞர் குழு அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications