மதுரையைக் கலக்கும் கொரோனா பால்..! ரசித்து ருசிக்கும் வாடிக்கையாளர்கள்!
மதுரை: ஓமிக்ரான் வைரஸ் தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் நிலையில், மதுரை அருகே கொரோனாவின் பெயரில் கொரோனா பால் என்ற பெயரில் மூலிகை பாலை விற்பனை செய்து அசத்தி வருகிறார் இளைஞர் ஒருவர்
Recommended Video
சீனாவிலிருந்து பரவிய கொரோனா பெருந்தொற்று, உலக நாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்தம்பிக்கச் செய்துள்ளநிலையில், அதற்கான தடுப்பூசிகளின் மூலமாக மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு உலகம் திரும்பிக் கொண்டிருக்கிறது.
கொரோனா வைரஸிலிருந்து உருமாறிய ஆல்ஃபா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், காமா என பல்வேறு வைரஸ்கள் பல்வேறு வகையில் அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவிலிருந்து தற்போது ஓமிக்ரான் என்ற பெயரில் கொரோனாவின் உருமாறிய வைரஸ், மீண்டும் உலக நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கிறது.
அச்சுறுத்தும் ஓமிக்ரான்.. எப்படி தோன்றியது? ஏன் மின்னல் வேகத்தில் பரவுகிறது? அமெரிக்க ஆய்வாளர் பகீர்
ஓமிக்ரான் பரவல்
தற்போது இந்தியாவுக்குள் ஓமிக்ரான் வைரஸ் தொற்று பரவியுள்ளதாக வெளியான தகவலையடுத்து, இந்தியா முழுவதும் அதி தீவிர கண்காணிப்பை ஒன்றிய மற்றும் மாநில சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. பிற உருமாறிய கொரோனா வைரஸ்களைக் காட்டிலும் ஒமிக்ரானின் பரவுதல் மிகத் தீவிரமானது என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
கருப்பட்டி காபி
இந்நிலையில் மதுரை மாவட்டம் அச்சம்பத்து அருகே சாயா கருப்பட்டி காபி என்ற கடையில் கொரோனா பால் தற்போது வாடிக்கையாளர்களால் மிகவும் விரும்பி அருந்தப்படுகிறது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் சாலமோன் ராஜ் கூறுகையில், கருப்பட்டியை மூலப்பொருளாக வைத்து, காபி, தேநீர், பால் என விற்பனை செய்து வருகிறோம். இது நமது பாரம்பரியமான முறையாகும். சீனி பயன்படுத்தும் நடைமுறை மிகவும் பிற்காலத்தில் வந்த ஒன்றாகும்.
பெருகும் ஆதரவு
ஆனால், அது நமது உடலுக்கு கேடு விளைவிப்பது. ஆனால், பனங்கருப்பட்டி, நமது உடலுக்குத் தேவையான சுண்ணாம்புச் சத்து மட்டுமன்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்கக்கூடியது. அதனால் இங்கு காபி, பால் மற்றும் தேநீர் ஆகியவற்றுக்கு கருப்பட்டியையும், நாட்டுச் சக்கரையையும் பயன்படுத்துகிறோம். இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல ஆதரவு உள்ளது.
கொரோனா பால்
கொரோனா காலம் என்பதால், கொரோனா பால் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம். பாலில், மிளகு, மஞ்சள்தூள், சுக்கு ஆகியவற்றுடன் கருப்பட்டியையும் கலந்து விற்பனை செய்கிறோம். இதனை மக்கள் வெகுவாக விரும்பி அருந்துகின்றனர். இது தவிர காலையும் மாலையும் பல்வேறு வகையான பயறு வகைகளையும் விற்பனை செய்கிறோம்.
வாடிக்கையாளர்கள் ஆதரவு
கடலை எண்ணெயில் பொறிக்கப்பட்ட உளுந்தவடையும் விற்பனைக்கு உள்ளது. மக்களுக்கு நியாயமான விலையில், ஆரோக்கியமான பொருளை விற்பனைக்குத் தருகிறோம் என்பதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி' என்கிறார். மிகச் சிறிய கடைதான் என்றாலும், அச்சம்பத்து பகுதியைக் கடந்து செல்கின்ற நபர்கள் பெரும்பாலும் இதன் கருப்பட்டி காபியை மட்டுமன்றி கொரோனா பாலையும் ஒருமுறை ருசித்துவிட்டே செல்கின்றனர்.