அவங்களும் வேணாம்.. இவங்களும் வேணாம்.. புதுசா இருந்தாலும்.. இவரே போதும்.. பலே மதுரை மக்கள்!
மதுரையில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் பெருமளவு வெற்றி பெற்றுள்ளார்.
Recommended Video
மதுரை: எங்களுக்கு இவங்களும் வேணாம், அவங்களும் வேணாம், புதுசா இருந்தாலும் இவரு போதும் எங்களுக்கு என்று ஒரு எழுத்தாளரை வரவேற்று உச்சாணி கொம்பில் ஏற்றி வைத்துள்ளனர் மதுரை மக்கள்!
தென் தமிழகத்தின் முக்கியமான தொகுதி மதுரை. அழகிரி களப்பணியில் இருந்தவரை இந்த தொகுதி எப்பவுமே பரபரப்பாக இருக்கும்! இந்த முறை அது மிஸ்ஸிங்தான்!
அதிமுக தரப்பில், ராஜ்சத்யன், அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை களமிறக்கப்பட்டனர். டேவிட் அண்ணாதுரையோ சிறந்த பேச்சாளர். அரசியல் அனுபவம் நிறைய உள்ளது. ராஜ் சத்யனுக்கோ அப்பா ராஜன் செல்லப்பா அதிமுக பிரபலம். அரசியல் பலம், பண பலம், கூடவே அமைச்சர் செல்லூர்ராஜுவின் சப்போர்ட்.. என அத்தனை பலத்தையும் வைத்திருப்பவர்.

ஒரே கல்லில் 3 மாங்காய்
இந்தநேரத்தில்தான் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்கினார் வெங்கடேசன். திமுக வெங்கடேசனை நிறுத்தியது ஒன்றும் சும்மா இல்லை. மதுரையில் நாயக்கர்கள் அதிகம் செளராஷ்டிரா, கள்ளர் இனத்தவர்களும் அதிகம். இவர்கள் ஓட்டுக்களை கவரதான் வெங்கடேசனை தேர்வு செய்தனர். இவர் நாயக்கர் குலத்தைச் சேர்ந்தவர். மனைவியோ செளராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவராம். மேலும் இவரது "காவல் கோட்டம்" கதையானது பிறமலைக் கள்ளர் சமூகத்தைப் பற்றிய நாவல் ஆகும். ஆக, இரு குல வாக்குகள் + பிறமலைக்கள்ளர் வாக்குகள் என ஒரே கல்லில் மூன்று மாங்காயை அடிக்க திமுக முடிவு செய்தது.

சரியான தேர்வு
அதுமட்டுமல்ல தமிழர் நாகரீகமான கீழடி விவகாரத்தில் தொடர்ந்து போராடியவர் வெங்கடேசன்தான். கீழடி அகழ்வாய்வுப் பணிகளில் நடந்த பெரும் குளறுபடிகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து மக்களிடையே கொண்டு சென்றதும் வெங்கடேசன்தான். எனவே கூட்டி கழித்துப் பார்த்து வெங்கடேசனையே தேர்வு செய்தனர்.

மன தைரியம்
முக அழகிரிக்கு பயந்து திமுக அங்கு நேரடியாக போட்டியிடவில்லை என்பதால் கூட்டணிக்கு மதுரையை திமுக ஒதுக்கி தந்துவிட்டது என்றும் சொல்லப்பட்டது. மற்றொருபுறம் ஒரு நல்ல வேட்பாளரை திமுக காவு வாங்கிவிட்டது என்று அமைச்சர் செல்லூர்ராஜுவே வெளிப்படையாக சொன்னார். எனினும் வெங்கடேசன் மிகுந்த மன தைரியத்துடன் களம் இறங்கினார்.

எம்பி மோகன்
மதுரையில் சிபிஎம் ஏற்கனவே 2 முறை ஜெயித்துள்ளது. மதுரைக்கும் சிபிஎம்முக்கும் இடையே ஒரு அழகான பந்தமும் உண்டு. அதற்கு காரணம் அன்றைய எம்பி மோகன்தான்! கட்சிக்காக பார்த்து இவருக்கு மக்கள் அன்று ஓட்டு போடவில்லை. மோகன் மீது மக்களுக்கு இருந்த பாசம்! தனிப்பட்ட மரியாதை! தனிப்பட்ட செல்வாக்கு! உழைப்பு! இதெல்லாம்தான் காரணம். அந்த பாசம் இன்று வரை தொடர்கிறது.

சமமான டஃப்
இந்த பாசத்தின் பிரதிபலிப்பைத்தான் இன்று வெங்கடேசனிடம் காட்டியுள்ளனர் மக்கள். தனது ஆழமான எழுத்துக்களால் மாவட்ட மக்களை தன்வசப்படுத்தி இருக்கிறார் வெங்கடேசன். சமுதாய சாடல்கள் அனைத்துமே அவரது எழுத்து, மற்றும் எண்ணங்களில் பிரதிபலிப்பதே இதற்கு காரணம். அதனால் ஒரு பக்கம் எல்லா வளமும், செல்வசெழிப்பும் நிறைந்த வேட்பாளர் என்றால், இன்னொரு பக்கம் எளிமை, மக்களின் மீதுள்ள நம்பிக்கை என்று மற்றொரு வேட்பாளர். இரு வேட்பாளர்களுக்குமே எதிலுமே ஒரு பொருத்தமும் இல்லாதவர்கள். ஆனாலும் சரிக்கு சமமான டஃப் கொடுத்தார்கள்.

அமைச்சர் உதயகுமார்
ஆனால் இன்றைக்கு எல்லாருமே மண்ணை கவ்விவிட்டார்கள். இதற்கு காரணம் அதிமுக அமைச்சர்கள் 2 பேர்தான். செல்லூர் ராஜு, உதயகுமார் இரு அமைச்சர்களின் பனிப்போர் எம்பி தேர்தல், இடைத்தேர்தல் வரை அதிமுக தலைமையை கிறுகிறுக்க வைத்துவிட்டது. ராஜ்சத்யனுக்கு சீட் தரவும் அமைச்சர் உதயகுமார் கடுப்பில் உள்ளதாகவும், இதனால் வேட்பாளரை தோற்கடிக்கும் உள்ளடி வேலையில் இறங்குவார் என்றும் சொல்லப்பட்டது. ஒருவேளை இரு அமைச்சர்களும் ஒத்து போயிருந்தால், இணக்கமா இருந்து அதிமுகவுக்காக உழைத்திருந்தால் ராஜ்சத்யன் வெற்றி எளிதாக கூட கிடைத்திருக்கலாம். காரணம், வெங்கடேசன் 4,47,075 வாக்குகளை பெற்றுள்ளர் என்றால், ராஜ்சத்யன் 3,07,680 வாக்குகளை பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications