”உயிரோடு போனவனை.. பொணமா தராங்க” இளைஞர் அஜித் குமார் லாக் அப் மரணம்.. கதறும் சகோதரர்!
மதுரை: திருட்டு வழக்கில் விசாரணைக்கு என்று அழைத்து செல்லப்பட்டவரை பொணமாக கொடுக்கிறார்கள் என்று உயிரிழந்த அஜித் குமாரின் சகோதரர் கதறி இருக்கிறார். என்னுடைய அண்ணன் மீது எந்தவொரு வழக்கும் கிடையாது என்று கூறிய அவர், ஒருநாள் முழுக்க காவலர்கள் முட்டிக்கால் போட வைத்து அடித்ததாக கூறியுள்ளார்.
மதுரை அருகே திருப்புவனம் பகுதியில் உள்ள மடப்புரம் காளியம்மன் கோவிலியில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித் குமார். திருட்டு வழக்கு தொடர்பாக இவரை விசாரிக்க போலீசார் அழைத்து சென்றுள்ளனர். இதன்பின் அவரது வீடுகளில் சோதனை மேற்கொண்ட போலீசார், இவரின் தம்பியையும் அழைத்து சென்று விசாரித்துள்ளனர். ஒரு கட்டத்தில் போலீசார் விசாரணையின் போதே அடிக்க தொடங்கி இருக்கின்றனர்.

லாக் அப் மரணம்?
போலீசாரின் எல்லையற்ற தாக்குதலால், ஒரு கட்டத்தில் அஜித் குமார் மயக்கம் அடைந்துள்ளார். இதன்பின் சிவகங்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். ஆனால் அஜித் குமாரை சோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறி இருக்கின்றனர்.
6 போலீசார் சஸ்பெண்ட்
இந்த விவகாரம் குடும்பத்தினருக்கு தெரிய வந்து, அவரின் உறவினர்கள் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டுள்ளனர். விசாரணைக்காக அழைத்து சென்ற பையனை, இப்படி கொன்றது எப்படி நியாயம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின் அவரது விசாரணையின் போது காவல் நிலையத்தில் இருந்த 6 போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மாஜிஸ்திரேட் விசாரணை
தொடர்ந்து இளைஞர் அஜித் குமாரின் பிரேத பரிசோதனை மதுரை அரசு மருத்துவமனையில் நடைபெற்று வந்தது. அங்கும் உறவினர்கள் கூடி, காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்தினர். இதன்பின் அஜித் குமாரின் உறவினர்களிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்றது.
என்ன நடந்தது?
தொடர்ந்து அஜித் குமாரின் உடலை பெற்றுக் கொள்ள பெற்றோரும், உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இந்த நிலையில் அஜித் குமாரின் சகோதரர் பேசுகையில், காரில் வந்த மாற்றுத்திறனாளி கார் சாவியை அண்ணனிடன் கொடுத்து பார்க் செய்ய கூறியுள்ளனர். அண்ணனுக்கு கார் ஓட்டத் தெரியாது என்பதால், வேறு ஒருவர் மூலம் காரை பார்க் செய்துவிட்டு ஒரு மணி நேரத்திற்கு பின் சாவியை கொடுத்துள்ளார்.
முட்டிக்கால் போட வைத்து அடித்தார்கள்
இதன்பின் நகையை காணவில்லை என்று பெண்கள் புகார் அளித்துள்ளனர். காரில் நகை இருந்ததற்கு எந்தவித ஆதாரமும் காட்டவில்லை. ஒருநாள் முழுக்க என் அண்ணனை அடித்தார்கள். என்னையும் அரை மணி நேரத்திற்கு மேலாக அடித்தார்கள். என்னை அடிப்பதால் உண்மையை சொல்லிவிடுவார் என்று அடித்தார்கள்.. முட்டிக் கால் போட சொல்லி அடித்தனர். மொத்தமாக 7 பேர் அடித்தார்கள்.
எந்த வழக்கும் இல்லை
எங்களுக்கு எஃப்ஐஆர் நகல் கூட கொடுக்கவில்லை. என் அண்ணன் மீது இதுவரை எந்தவொரு வழக்கும் கிடையாது. எங்களை விசாரணைக்கு அழைத்து சென்றுவிட்டு, ஒரு இடத்தில் வைத்து அடித்தார்கள். விசாரணைக்கு என்று அழைத்து செல்லப்பட்டவனை, பொணமாக கொடுக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். அவர் அருகில் இருந்து அஜித்குமாரின் தாய் கதறுவது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications