3 மணி நேரம் லேட்.. பாலுக்கு அக்கப்போர்.. மிரண்ட மதுரை! ஆவின் மண்டல பொது மேலாளர் வீடு முற்றுகை
மதுரை: மதுரையில் அதிகாலை 4 மணிக்கு விநியோகிக்க வேண்டிய ஆவின் பால் 7 மணிக்குதான் முகவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இது போன்ற தாமதம் ஏற்படுவதாக முகவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று முகவர்கள் ஒன்று சேர்ந்து மதுரை மண்டல ஆவின் பொது மேலாளர் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.
ஆவின் பால் தொடர்ந்து தாமதமாவதால் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் விநியோகிக்க முடியவில்லை என்றும், இதனால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள் என்றும் முகவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கொள்முதல்
தமிழ்நாடு அரசின் சார்பில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து ஆவினுக்கு நாளொன்றுக்கு 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் தற்போது ஆவின் பால் முன்பைவிட அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல பால் பாக்கெட்டுகளில் விளம்பரம் செய்வதன் மூலமும் புதிய லாபத்தை அரசு பெற்று வருகிறது. இவ்வாறு இருக்கையில், சில இடங்களில் பால் முறையாக விநியோகிக்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு மேலெழுந்துள்ளது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே இந்த பிரச்னை நீடித்து வருகிறது.

முற்றுகை
இன்றும் இந்த பிரச்னை நீடித்த நிலையில் ஆவின் பால் விநியோக டிப்போ முகவர்கள் ஒன்று சேர்ந்து மதுரை மண்டல ஆவின் பொது மேலாளர் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர். வழக்கமாக காலை 4 மணிக்கு வர வேண்டிய பால் வண்டி கடந்த சில நாட்களாக 7 மணிக்கு வருகிறதாக இவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பால் விநியோகிக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் கூறியுள்ளனர். இது ஒட்டுமொத்த பால் விநியோக சங்கிலியை பாதிக்கும் என்றும், வாடிக்கையாளர்கள் மத்தியில் அவப்பெயரை உருவாக்கி ஆவின் அவர்களிடத்திலிருந்து அந்நியப்பட்டுவிடும் என்றும் முகவர்கள் கூறியுள்ளனர்.

தாமதம்
அரை மணி நேரத்திற்கும் மேலாக பொது மேலாளர் வீட்டை முற்றுகையிட்டிருந்த முகவர்கள் பின்னர் கலைந்து சென்றுவிட்டனர். ஆவின் பால் விநியோகத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தைவிட தனியார் பால் விநியோகத்திற்குதான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் முகவர்கள் விமர்சித்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க மறுபுறத்தில் ஆவின் பால் தற்போது நெருக்கடியை சந்தித்து வருவதாக பால் விநியோகர்களும் குற்றம்சாட்டியுள்ளனர். அதாவது கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வரும்போது நாளொன்றுக்கு 46 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், ஆனால் தற்போது 36 லட்சம் லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாகவும் இதற்கு அரசு கொடுக்கும் குறைந்த தொகைதான் காரணம். எனவே இந்த தொகையை அதிகரிக்க வேண்டும் என்றும் விநியோகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

விலை
நாளொன்றுக்கு ஆவினில் 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படும் நிலையில் தனியார் பால் நிறுவனங்கள் சுமார் 2.57 கோடி லிட்டர் பாலை கொள்முதல் செய்கின்றன. ஆவின் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ.32, எருமை பாலுக்கு ரூ.42 வழங்குகிறது. ஆனால், தனியார் நிறுவனங்கள் பசும்பாலுக்கு ரூ.42-45, எருமை பாலுக்கு ரூ.65 என கொடுக்கின்றனர். எனவே விநியோகர்கள் தனியார் நிறுவனத்தை நோக்கியே நகர்கின்றனர். ஆக பால் அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டால்தானே மக்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப கொண்டு சேர்க்க முடியும்? எனவே அரசு கொள்முதலை உயர்த்த வேண்டும் என்றும், அதே நேரத்தில் விநியோகத்தில் உள்ள சுணக்கங்களை நீக்க வேண்டும் என்றும் முகவர்களும், விநியோகர்களும் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications