திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டாம்னு சேகர்பாபு சொன்னாரா? நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி
மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றக் கூடாது என அமைச்சர் சேகர்பாபு சொன்னாரா, இல்லை கோயில் செயல் அலுவலர் தானாக செய்தாரா? என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் மலை மீது தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் அதிகாரிகள் செயல்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி, கடும் கண்டனங்களை தெரிவித்தார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை ஆட்சியர் பிரவீன்குமார், காவல் ஆணையர் லோகநாதன், துணை ஆணையர் இனிகோ திவ்யன், உதவி ஆணையர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகினர்.
ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் காணொலி மூலம் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருந்தவர்களை அப்படியே விடுவதா?
நீதிமன்ற அவமதிப்பு செய்தவர்கள் மன்னிப்பு கோரியோ விளக்கமளித்தோ எந்த மனுவும் வழங்கவில்லை. திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றாமல் நீதிமன்ற அவமதிப்பை கோயில் செயல் தானாக செய்தாரா இல்லை, அமைச்சர் சேகர்பாபு சொன்னாரா?
தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை நிறைவேற்றாத ஆட்சியர், துணை ஆணையரை மன்னிக்க இயலாது என சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
வழக்கின் பின்னணி
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை உச்சியில் தீபம் ஏற்றுமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இரண்டு முறை தனது உத்தரவை விடுத்தும், மனுதாரர் ராம ரவிக்குமார் தீபம் ஏற்ற தமிழக காவல்துறை மறுத்தது. இந்த உத்தரவால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது.
நீதிமன்ற உத்தரவை மீறியதால், மதுரை ஆட்சியர் பிரவீன் குமார், காவல் ஆணையர் லோக நாதன், துணை ஆணையர் இனிகோ திவ்யன் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, ஜனவரி 9 அன்று மூவரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரானார்கள். ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் காணொலிக் காட்சி வாயிலாக இதில் பங்கேற்றார்.
அப்போது, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், 'நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றாததை ஏற்றுக் கொள்ளவே முடியாது' என்று தெரிவித்தார். அத்துடன், 'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மதுரை ஆட்சியர் மற்றும் 144 தடை உத்தரவை ரத்து செய்யாத மதுரை துணை ஆணையர் இருவரையும் மன்னிக்க முடியாது' என்றார் அவர்.
இதனைத் தொடர்ந்து, 'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டாம் என அமைச்சர் சேகர்பாபு சொன்னாரா? அவர் சொல்லி தான் இப்படிச் செய்தீர்களா?' என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு மதுரை துணை காவல் ஆணையர் இனிகோ திவ்யன், 'இது என் சுய முடிவு' என பதிலளித்தார். 'நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே நிறைவேற்றாதவர்களை சும்மா விட்டுவிட முடியுமா?' எனவும் நீதிபதி சுவாமிநாதன் கேள்வி எழுப்பினார்.
'நீதிமன்ற உத்தரவு குறித்து ஏன் எழுத்துப்பூர்வமான பதில் தாக்கல் செய்யப்படவில்லை? ஒரு மாத அவகாசம் இருந்தும் தமிழக அரசு எழுத்துப்பூர்வ பதில் மனுவை தாக்கல் செய்யவில்லை' என அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு தமிழக அரசு தரப்பில், அடுத்த விசாரணையின்போது பதில் தாக்கல் செய்வதாக அரசு தெரிவித்தது. நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் எனக் கூறி, நீதிபதி இந்த வழக்கை ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications