விபத்தில் உயிரிழந்த பேரையூர் ராணுவ வீரரின் உடல் உறுப்புகள் தானம்...3 பேருக்கு மறுவாழ்வு
விபத்தில் உயிரிழந்த பின்னரும் உடல் உறுப்பு தானத்தால் பேரையூர் ராணுவ வீரர் 3 பேருக்கு மறுவாழ்வு அளித்து உள்ளார்.
மதுரை: வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் உறுப்புகள் மூன்று பேருக்கு தானமாக வழங்கப்பட்டது. உயிரிழந்த பின்னரும் மூன்று பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார் ராணுவ வீரர்.
உயிரிழந்தும் பிறருக்கு வாழ்வு அளித்த ராணுவ வீரரின் பெயர் முரளி மனோகரன். வயது 29. இவர் பேரையூரைச் சேர்ந்த சின்னமருது என்பவரின் மகனாவார். இவர் உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார்.
கடந்த 1ஆம் தேதி மதுராவில் பணி முடிந்து முரளி மனோகரன் மோட்டார் சைக்கிளில் குடியிருப்புக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே மாடு சென்றது.

தூக்கி வீசப்பட்ட ராணுவ வீரர்
மாட்டின் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திடீரென பிரேக் பிடித்தார். இதில் நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ராணுவ மருத்தவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

உடல் உறுப்புகள் தானம்
இதையடுத்து அவரது உடல் பாகங்களான கண்கள், இதயம், கல்லீரல் ஆகியவை அவரது மனைவியின் ஒப்புதலோடு தானம் செய்யப்பட்டது. அவை ராணுவ மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. முன்னுரிமை அடிப்படையில் தேவைப்படுபவர்களுக்கு உடல் உறுப்புகள் தானம் செய்யப்படும். இதன் மூலம் 3 பேர் மறுவாழ்வு பெறுகிறார்கள்.

சொந்த ஊரில் உடல்
இதையடுத்து அவரது உடல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான பேரையூருக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உறவினர்கள் கண்ணீர்
கடந்த ஒரு வருடத்துக்கு முன்புதான் இவருக்கு கவுசல்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. விபத்தில் பலியான கணவரின் உடலை பார்த்து அவரது மனைவி, உறவினர்கள் கதறி அழுதது பார்க்க சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது உடல் பேரையூரில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications