2026ல் பெண் சிங்கமாக பிரேமலதா சட்டசபைக்கு செல்வார்.. அடித்து சொல்லும் விஜய பிரபாகரன்!
மதுரை: 2006ல் விஜயகாந்த் எப்படி ஆண் சிங்கமாக சட்டசபைக்குள் சென்றாரோ, அதேபோல் 2026ல் என் அம்மா பிரேமலதா விஜயகாந்த் பெண் சிங்கமாக சட்டசபைக்குள் செல்வார் என்று தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். பிரேமலதா விஜயகாந்த் மட்டுமல்லாமல் அவருடன் சேர்ந்து இன்னுஇம் பலரும் சட்டசபைக்கு செல்வார்கள், அதற்காக நான் உழைக்க தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அத்தனை கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். முதற்கட்ட சுற்றுப்பயணத்தை முடித்துள்ள பிரேமலதா விஜயகாந்த், தற்போது 2ஆம் கட்ட பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

அதேபோல் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் தேமுதிக நெருக்கம் காட்டி வருகிறது. பிரேமலதா விஜயகாந்த் நேரடியாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். இதனால் திமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என்று சொல்லப்பட்ட நிலையில், திடீரென தமாகா நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளார் சுதீஷ் பங்கேற்று அதிர்ச்சி கொடுத்தார்.
அதுமட்டுமல்லாமல் தேமுதிக கோரிய மாநிலங்களவை இடமும் அடுத்த ஆண்டு அளிக்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடக்கும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விஜய பிரபாகரன் பேசுகையில், 2006ல் விஜயகாந்த் எப்படி ஆண் சிங்கமாக சட்டசபைக்குள் சென்றாரோ, அதேபோல் 2026ல் என் அம்மா பிரேமலதா விஜயகாந்த் பெண் சிங்கமாக சட்டசபைக்குள் செல்வார். அவருடன் சேர்ந்து இன்னும் பல தேமுதிக நிர்வாகிகளும் எம்எல்ஏ-க்களும் சட்டசபைக்கு செல்வார்கள்.
அதற்கு உறுதுணையாக விஜய பிரபாகரன் 200 சதவிகிதம் உழைக்க தயாராக இருக்கிறேன். எனது சொந்த ஆசைகளை விடவும், தந்தை விஜயகாந்தின் லட்சியத்திற்காக போராடி வருகிறேன். சுயமாக ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி, சுயமாக கட்சியை தொடங்கிய கட்சி தேமுதிக. இந்தக் கட்சியை யாராலும் அசைக்க முடியாது.
இனி விஜயகாந்தையும், பிரேமலதா விஜயகாந்தையும் பார்த்திருப்பீர்கள். இனி விஜயகாந்த், பிரேமலதா இருவரை கலந்து வரும் காலத்தில் விஜய பிரபாகரனை பார்ப்பீர்கள். மடியில் கனமில்லை.. அதனால் எங்களுக்கு எந்த பயமும் இல்லை.. இங்குள்ள ஒவ்வொரு நபரும் விஜயகாந்த் தான். விஜயகாந்தின் ஆசை, லட்சியம் எல்லாம் ஒன்றுதான். 2026ல் நிச்சயமாக முரசு வெல்லும்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரு தரப்பும் சின்ன தடுமாற்றத்துடன் பயணித்து வருகிறது. அதனை சரி செய்வதற்கு நிச்சயமாக தேமுதிக தேவை. தேமுதிக இணைந்தால் மட்டுமே, அந்தக் கட்சி ஆட்சி அமைக்க முடியும். எந்தப் படை இல்லாமல், எந்தப் படையும் வெல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications