மதுரை அதிமுக எதிர்காலம் அடங்கி இருக்கு.. மும்மூர்த்திகளுக்கு சவாலாக இருக்கும் திமுக! களம் எப்படி?
மதுரை: மதுரை அதிமுகவின் 3 முக்கிய வேட்பாளர்களான செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா ஆகிய மூவருக்கும் திமுக வேட்பாளர்கள் கடுமையான சவால் அளித்து வருவது தெரிய வந்துள்ளது. குறிப்பாக மதுரை மேற்கு தொகுதியில் ரகு பாலாஜி மற்றும் திருமங்கலம் தொகுதியில் சேடப்பட்டி மணிமாறன் கடும் போட்டியை அளித்து வருகின்றனர்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், மதுரையில் தேர்தல் களம் உச்சத்தில் இருக்கிறது. 2021 சட்டசபைத் தேர்தலில் நகர்ப்புறங்களில் திமுகவும், புறநகர்ப் பகுதிகளில் அதிமுகவும் வென்றன. புறநகரில் சோழவந்தான் தொகுதியில் மட்டும் திமுகவும், நகர்ப்புறத்தில் மதுரை மேற்கு தொகுதியில் மட்டும் அதிமுகவும் வென்றன.

இந்த முறை மதுரை மேற்கு தொகுதியில் மீண்டும் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு போட்டியிடுகிறார். அதேபோல் திமுக சார்பாக ரகு பாலாஜி களத்தில் இருக்கிறார். இந்த தொகுதியில் திமுக கட்டாயம் வெல்ல வேண்டும் என்று முடிவு செய்த ஸ்டாலின், அந்த தொகுதியின் பொறுப்பை மூர்த்தி வசம் ஒப்படைத்தார். இது மூர்த்தியின் செயல்பாடுகளுக்கு வைக்கப்பட்ட டெஸ்டாகவே அமைந்திருக்கிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பிருந்தே ரகு பாலாஜி திமுகவினரை கவர் செய்துவிட்டார். பரிசுப் பொருட்கள், விருந்து, உதவித்தொகை என்று திமுகவினருக்கு தேர்தலுக்கு முன்பே வாரி இரைத்துவிட்டார். இதனால் உட்கட்சியில் ரகு பாலாஜிக்கு சீட் கொடுத்ததற்கு பெரிய எதிர்ப்பு இல்லை. பக்க பலமாக அமைச்சர் மூர்த்தியும் நிற்கிறார். சோசியல் மீடியாவில் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார்.
இவருக்கு செல்லூர் ராஜுவால் ஈடுகொடுக்க முடியவில்லை. தொகுதியில் செல்லூர் ராஜு மீது இருக்கும் அதிருப்தி மற்றும் தவெக பிரிக்கும் வாக்குகள் திமுகவுக்கு சாதகமாக திரும்பும் என்று நம்பப்படுகிறது. அதேபோல் களத்தில் தவெக எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக செயல்படுவது எந்த பக்கம் சிக்கலாகும் என்று புரியாததால், செல்லூர் ராஜுவின் தேர்தல் பிரச்சாரத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் திருமங்கலம் தொகுதியில் ஆர்பி உதயகுமாரை எதிர்த்து திமுக சார்பாக சேடப்பட்டி மணிமாறன் களமிறக்கப்பட்டுள்ளார். சேடப்பட்டி மணிமாறனுக்காக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பணியாற்றி வருகிறார். இதனால் ஆர்பி உதயகுமார் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். திருப்பரங்குன்றத்தில் ராஜன் செல்லப்பாவுக்கு திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டி சவால் அளிக்கவில்லை.
ஆனால் தவெக வேட்பாளர் சிடிஆர் நிர்மல் குமார் மிகப்பெரிய அளவில் பணியாற்றி வருகிறார். இவர் பிரிக்கும் வாக்குகள் திமுகவுக்கு சாதகமாக மாறும் சூழல் உருவாகி இருக்கிறது. அதிமுகவில் இவர்கள் 3 பேரை சுற்றியே மதுரையின் அரசியல் இருந்து வருகிறது. இந்த தேர்தலில் யார் தோல்வி அடைந்தாலும், அவர்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். இதனால் அதிமுகவினர் கலக்கத்தில் இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications