இது வாயில் வடை சுடும் ஆட்சி.. அதற்கு மோடியே சாட்சி.. கவிதை பாடி இரு அரசுகளை விமர்சித்த ஸ்டாலின்!
திருமங்கலம்: இது வாயில் வடை சுடும் ஆட்சி, அதற்கு மோடியே சாட்சி என கவிதை பாடி மத்திய- மாநில அரசுகளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.
விருதுநகர் மக்களவை தொகுதி வேட்பாளர் மாணிக்கம் தாகூர்,
சாத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.வி. சீனிவாசன் ஆகியோரை ஆதரித்து தொகுதிக்குள்பட்ட திருமங்கலத்தில் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் இரு வேட்பாளர்களையும் ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில் தினமும் தூங்கி எழுந்தவுடன் செல்போனை பார்க்கும் வழக்கம் எனக்கு உண்டு. அது போல் இன்றும் செல்போனை பார்த்தேன். அதில் மத்திய- மாநில அரசுகளின் ஆட்சிகளை பற்றி சுருக்கமாக கவிதை வடிவில் அளித்திருந்தார்.
இந்த கவிதையை மதுரை பொதுக் கூட்டத்தில் படித்து காண்பித்தேன். அதுபோல் உங்களுக்கு படித்து காண்பிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது.
அந்த கவிதை பின்வருமாறு:
இது பொள்ளாத ஆட்சி
அதற்கு பொள்ளாச்சியே சாட்சி
இது துப்புக் கெட்ட ஆட்சி
அதற்கு தூத்துக்குடியே சாட்சி
இது தரிசு ஆக்கும் ஆட்சி
அதற்கு நெடுவாசலே சாட்சி
இது மனுதர்ம ஆட்சி
அதற்கு நீட் தேர்வே சாட்சி
இது பாலைவன ஆட்சி
அதற்கு மேகதாதுவே சாட்சி
இது ஊழல் ஆட்சி
அதற்கு ரபேலே சாட்சி
இது நாணயங்கெட்ட ஆட்சி
அதற்கு செல்லாத நோட்டே சாட்சி
இது கொள்ளைக்கார ஆட்சி
அதற்கு ஜிஎஸ்டி வரியே சாட்சி
இது கொலைக்கார ஆட்சி
அதற்கு கொடநாடே சாட்சி
இது மதவெறி ஆட்சி
அதற்கு மாட்டுக்கறியே சாட்சி
இது வாயில் வடை சுடும் ஆட்சி
அதற்கு மோடியே சாட்சி
இது எடுபிடி ஆட்சி
அதற்கு எடப்பாடியே சாட்சி
என்று கவிதை நடையை வாசித்து காண்பித்தார்.