மதுரை வடக்கு வேட்பாளர் கோ.தளபதி.. மதுரையில் 7 தொகுதிகளில் களமிறங்கும் திமுக.. யாருக்கு வாய்ப்பு?
சென்னை: மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் 3 தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கியுள்ள திமுக, மீதமுள்ள 7 தொகுதிகளிலும் நேரடியாக களமிறங்கி இருக்கிறது. அதன்படி மதுரை கிழக்கு தொகுதியில் மீண்டும் அமைச்சர் மூர்த்தி, திருப்பரங்குன்றம் தொகுதியில் கிருத்திகா தங்கப்பாண்டி, திருமங்கலம் தொகுதியில் சேடப்பட்டி மணிமாறன், மதுரை மத்திய தொகுதியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மேற்கு ரகு பாலாஜி, மதுரை வடக்கு கோ.தளபதி, சோழவந்தான் ஆ.வெங்கடேசன் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. கடந்த முறை மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் 5ல் திமுகவும், 5ல் அதிமுகவும் வென்றது. இந்த முறை மதுரையில் கூடுதல் தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக இருக்கிறார். இந்த தேர்தலில் மதுரை தெற்கு தொகுதி மீண்டும் மதிமுக வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மேலூர் மற்றும் உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளும் காங்கிரஸ் வசம் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. கடந்த முறை திருப்பரங்குன்றம் தொகுதி சிபிஎம் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சூழலில், இம்முறை திமுக கையில் எடுத்துள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ராஜன் செல்லப்பாவை எதிர்த்து திமுக சார்பாக கிருத்திகா தங்கப்பாண்டி போட்டியிடுகிறார். அதேபோல் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாரை திருமங்கலம் தொகுதியில் எதிர்த்து சேடப்பட்டி மணிமாறன் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுரை மேற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை எதிர்த்து ரகு பாலாஜி களம் காண்கிறார்.
அதேபோல் மதுரை வடக்கு தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ தளபதிக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவரை எதிர்த்து அதிமுக தரப்பில் சரவணன் களமிறங்கி இருக்கிறார். அதேபோல் மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு மீண்டும் 3வது முறையாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சோழவந்தான் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ வெங்கடேசனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் மதுரை தெற்கு தொகுதி வேட்பாளராக மதிமுக சார்பாக பூமிநாதன் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மேலூர் தொகுதி அதிமுகவின் கோட்டையாகும்.
கடந்த தேர்தலிலும் மேலூர் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு திமுக தள்ளிவிட்டது. ஆனால் உசிலம்பட்டி தொகுதியை கூடுதலாக பெற்றுள்ளது. அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன் திமுக பக்கம் வந்துள்ள சூழலில், அவர் காங்கிரஸ் வெற்றிக்காக களமிறங்கி பணியாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications