கிரிக்கெட் போட்டிக்கு நடுவிலும் தீயாய் வேலைபார்த்த திமுகவினர்.. மதுரை தமுக்கத்தில் நடந்த சம்பவம்
மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் பிரம்மாண்ட திரையில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை காண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கிரிக்கெட் போட்டியை காண வந்த ரசிகர்களிடம் திமுக இளைஞர் அணியினர் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து பெற்றனர்.
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த அக்டோபர் மாதம் 5-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் தொடர் சென்னை உள்பட இந்தியாவின் 10 நகரங்களில் நடந்தது. உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றதால் இந்திய அணியே கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் கணித்து இருந்தனர். அதன்படியே இந்திய அணியும் முதலில் இருந்தே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஒன்பது லீக் சுற்றில் இந்தியா தோல்வியே அடையாமல் வெற்றி பெற்று அரை இறுதி போட்டியில் நுழைந்தது. அரையிறுதியிலும் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் கம்பீரமாக நுழைந்தது. மற்றொரு அரை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி நடைபெற்றது.
ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகமே இந்த போட்டியை ஆவலுடன் எதிபார்த்து இருந்தது. தமிழ்நாட்டிலும் உலக கோப்பை பைனல் போட்டியைக் காண பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மெரினா, பெசன்ட் நகர் பீச்சில் கிரிக்கெட் பார்க்க பிரம்மாண்ட எல்.இ.டி திரையுடன் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இங்கு சுமார் 5 ஆயிரம் பேர் வரை கூடி மேட்சை பார்த்தனர். அதேபோல், மதுரை தமுக்கம் மைதானத்திலும் கிரிக்கெட் பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
தமுக்கம் மைதானத்தில் திமுக இளைஞரணி சார்பில் எல்.இ.டி. திரை ஒன்று வைக்கப்பட்டு திரையிடப்பட்டு இருந்தது. பத்தாயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்டை உற்சாகத்துடன் கண்டு களித்தனர். இந்திய அணி தோல்வி அடைந்த போதும் ஆஸ்திரேலியாவையும் கைதட்டி ரசிகரக்ள் பாராட்டியதையும் காண முடிந்தது.
இதற்கிடையே, போட்டியை பார்க்க வந்த கிரிக்கெட் ரசிகர்களிடம் திமுகவினர் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து பெற்றனர். நீட் தேர்வுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்துக்களை பெறும் இயக்கத்தை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கியுள்ளார். 50 லட்சம் கையெழுத்துக்கள் பெற்று நீட் தேர்வுக்கு எதிரான மனுவை ஜனாதிபதிக்கு அனுப்பவும் திமுக இளைஞரணி தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications