கிறிஸ்தவர்கள் வாக்கு யாருக்கு? தேவாலயங்களில் விஜய்க்கு எதிராக பிரச்சாரம்.. திமுகவின் அதிரடி வியூகம்!
சென்னை: தேவாலயங்களில் மறைமுகமாக விஜய்க்கு எதிரான பிரச்சாரத்தை திமுக கையில் எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. தேவாலயங்களில் பாதர், பாஸ்டர்கள் மூலமாக விஜய் அடுத்த 5 ஆண்டுகளில் எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்து நமது ஆதரவை வழங்குவோம் என்று திருப்பலியின் போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஒவ்வொரு கட்சியும் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக - பாஜக கூட்டணி இணைந்திருப்பதால், அந்த கூட்டணியை சிறுபான்மை மக்கள் ஆதரிக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. இதனை உணர்ந்தே அதிமுகவில் ஒரேயொரு இஸ்லாமியருக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் சிறுபான்மை மக்களுக்கு திமுக மற்றும் விஜய் ஆகிய இரு வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாக பார்க்கப்படுகிறது. விஜய் கிறிஸ்தவர் என்பதோடு, சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதனை கணக்கில் கொண்டு திமுக சிறுபான்மை மக்களின் வாக்குகளை கைப்பற்ற தீவிரமாக இறங்கி இருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களுக்கு கிறிஸ்தவர்கள் செல்வது வழக்கம். அப்போது பாஸ்டர் மற்றும் ஃபாதர்களை வைத்து விஜய்க்கு எதிராக மறைமுகமாக தேர்தல் பிரச்சாரத்தை திமுக மேற்கொண்டு வருகிறது. மதுரையில் உள்ள பிரபல தேவாலயத்தில், விஜய் கிறிஸ்தவராக இருக்கட்டும்.. வேறு யாராக இருக்கட்டும்.. அவருக்கு சுயஒழுக்கம் இல்லை. அரசியல் அறிவும் இல்லை.
தமிழக மக்களுக்காக ஒரு 5 வருடம் அல்லது 10 வருடம் தன்னுடைய நிலைப்பாட்டை நிரூபித்து காட்டட்டும்.. அப்போது வாக்களித்து கொள்ளலாம்.. இன்னும் காலம் இருக்கிறது.. தன்னை அவர் நிரூபித்த பின் அவருக்கு நாம் ஆதரவு கொடுக்கலாம். ஆனால் இந்த தேர்தலில் நீங்கள் திமுகவிற்கு போடாமல் வேறு கட்சிக்கு போடும் அனைத்து வாக்குகளும் பாஜக அணிக்கு போடுவது போல தான்.
விஜய் கட்சியில் நிறுத்துவதற்கு ஆள் இல்லாமல் பாஜக மற்றும் வேறு கட்சியில் சமூக நலத்திற்கு எதிரான ஆட்களை தான் தற்போது வேட்பாளராக நிறுத்தி இருக்கிறார் என்று பேசி இருக்கின்றனர். இதனால் கிறிஸ்தவர்களின் வாக்குகள் விஜய் பக்கம் திரும்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் வெள்ளிக்கிழமை பள்ளிவாசல் தொழுமையிலும் விஜய்க்கு எதிரான பிரச்சாரத்தில் திமுக ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.
இதன் மூலமாக இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் திமுக முந்துவதாக பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் விஜய் இதுவரை கிறிஸ்தவர்களை நேரடியாக சந்திக்கவில்லை. எந்த தேவாலயங்களுக்கும் சென்று ஆதரவும் கோரவில்லை. விஜய் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் மட்டும் பள்ளிவாசல் மற்றும் தேவாலயங்களுக்கு சென்று ஆதரவு கோரி வருகின்றனர். இது களத்தில் எடுபடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications