கேட்டு கேட்டு செய்யும் உதவி... சரவணன் எம்.எல்.ஏ.வுக்கு குவியும் பாராட்டுக்கள்
மதுரை: பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்வாகி கல்லூரிக் கட்டணம் கட்ட முடியாமல் தவித்த ஏழை மாணவியின் கல்விச் செலவை முழுவதுமாக ஏற்றுள்ளார் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. சரவணன்.
சரவணன் எம்.எல்.ஏ.வின் இந்த நடவடிக்கைகள் மதுரை மக்களிடையே அதுவும் குறிப்பாக திருப்பரங்குன்றம் தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.
மேலும், திமுக தலைமையின் கவனத்தையும் ஈர்த்து மு.க.ஸ்டாலின் குட்புக்கில் சரவணன் பெயரும் இடம்பெற்றுள்ளது.

கல்விச் செலவு
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தென்பரங்குன்றத்தை சேர்ந்தவர் தேவயானி. தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துள்ள இவர் 600-க்கு 500 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பெற்றோர் குடுகுடுப்பை வைத்து குறி சொல்லும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏழ்மையான பின்புலத்தை சேர்ந்த மாணவி தேவயாணி குறித்து ஆங்கில பத்திரிகையான தி இந்துவில் செய்தி வெளியானதை அடுத்து, தனது தொகுதிக்குட்பட்டவர் என்ற முறையில் அந்த மாணவியின் பெற்றோரை தொடர்புகொண்டு குறைகளை கேட்டுள்ளார் சரவணன் எம்.எல்.ஏ.

நேரில் அழைத்து
மேலும், மாணவி தேவயானி மற்றும் அவரது பெற்றோரை நேரில் அழைத்த சரவணன் எம்.எல்.ஏ., 3 ஆண்டுகள் கல்லூரியில் படிப்பதற்கான கட்டணச் செலவை முழுமையாக தாமே ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்துள்ளார். மேலும், நிதியுதவி அளித்ததுடன் மாணவியின் கோரிக்கையான தங்கள் பகுதிக்கு மின் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பதை உடனடியாக மின் வாரிய அதிகாரிகள் கவனத்திற்கும் கொண்டு சென்றார் சரவணன் எம்.எல்.ஏ.

கல்லூரியில் சேர்ப்பு
தற்போது ஆன்லைனில் கல்லூரி சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும் நிலையில், எந்தக் கல்லூரியில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளுமாறும், செலவை பற்றி கவலைப்பட வேண்டாம் எனவும் சரவணன் கூறியிருக்கிறார். மேலும், பாத்திமா மகளிர் கல்லூரியில் மகளை சேர்க்க உதவ வேண்டும் என தேவயானியின் பெற்றோர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதன்படி பாத்திமா கல்லூரியில் தேவயானியை இளங்கலை படிப்பில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

மக்களுடன் நெருக்கமாக
ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினரும் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பது மு.க.ஸ்டாலினின் கட்டளை. அதற்கேற்றார் போல் மக்களின் நன்மதிப்பை பெறும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் திமுக தலைமையின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் சரவணன் எம்.எல்.ஏ. தற்போது கட்சியில் மருத்துவரணியின் மாநில நிர்வாகியாக இருக்கும் இவர் விரைவில் மதுரை மாவட்ட திமுகவில் முக்கிய பதவிக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.












Click it and Unblock the Notifications