திருப்பரங்குன்றம் தொகுதியில் நேரடியாக களமிறங்கும் திமுக.. ராஜன் செல்லப்பாவுக்கு வைக்கப்பட்ட செக்?
மதுரை: 2026 சட்டமன்றத் தேர்தலில் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் இம்முறை திமுகவே நேரடியாக களமிறங்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரம் முக்கியப் பிரச்சனையாக மாறி இருக்கும் நிலையில், திமுக கூட்டணிக்கு ஒதுக்காமல், நேரடியாக களமிறங்கி தங்களின் பலத்தை நிரூபிக்க ஆலோசித்து இருப்பதாக கூறப்படுகிறது.
மதுரையில் எடப்பாடி பழனிசாமி 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று திருப்பரங்குன்றம் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதிமுகவின் சிட்டிங் எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவின் சொந்த தொகுதி என்பதால், எடப்பாடி பழனிசாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு மாடுகள், கிரான் மூலமாக மாலை அணிவித்து வரவேற்பு என்று திருப்பரங்குன்றமே அமர்க்களப்பட்டது. கடந்த முறை திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக நேரடியாக போட்டியிடவில்லை. சிபிஎம் வேட்பாளர் பொன்னுத்தாயி களமிறக்கப்பட்டார். இதனால் அதிமுகவுக்காக போட்டியிட்ட ராஜன் செல்லப்பா எளிதாக சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதனிடையே திருப்பரங்குன்றம் மலையை வைத்து இந்து முன்னணி மற்றும் பாஜக செய்த செயல்கள் காரணமாக மதுரை மாவட்ட மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். திருப்பரங்குன்றம் மலையில் தர்கா இருந்தாலும், இந்து மற்றும் இஸ்லாமிய மக்கள் நட்புடன் இருந்து வருகின்றனர். மதநல்லிணக்கத்தை சீண்டும் வகையில் சில செயல்கள் நடந்ததால், இம்முறை அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதியை பொறுத்தவரை முக்குலத்தோர் சமூக மக்கள் அதிகளவில் இருக்கின்றனர். இந்த தொகுதியை பாஜக கேட்டு வந்தாலும், ராஜன் செல்லப்பா போன்ற பலம் வாய்ந்த தலைவரை வேறு தொகுதியில் நிற்க வைப்பது சிக்கல்தான். இதனால் பெரும்பாலும் அதிமுகவே போட்டியிட வாய்ப்புகள் உள்ளது. இதனால் திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக நேரடியாக போட்டியிட முடிவு எடுத்துள்ளது.
அதற்கான பணிகளை ஏற்கனவே திமுக தொடங்கி இருக்கிறது. அமைச்சர் மூர்த்தி தலைமையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே மதுரை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் பாலாஜி, ஒன்றியச் செயலாளர் த.பாண்டியனின் மனைவி ஈஸ்வரி உள்ளிட்டோர் சொந்த செலவில் பணிகளை செய்து வருகின்றனர்.
இருவருமே அமைச்சர் மூர்த்தி தரப்புக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே திமுக நேரடியாக போட்டியிட்டிருந்தால், திருப்பரங்குன்றம் தொகுதியை வென்றிருக்கலாம் என்று அக்கட்சியினர் பேசி வந்தனர். இதனால் பெரும்பாலும் திமுகவே நேரடியாக களமிறங்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் கடைசி நேரத்தில் திமுக தலைமை என்ன முடிவு எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications