இரட்டை ரயில் பாதை பணி முடிந்தது..மதுரை வழியாக மீண்டும் ரயில்கள் இயக்கம்..பயணிகள் ஹேப்பி
இரட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில்கள் மீண்டும் மதுரை வழியாக இயக்கப்படுகின்றன.
மதுரை: இரட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மதுரை வழியே செல்லும் ரயில்களில் சில மாற்றங்களும் சில ரயில்கள் ரத்தும் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் மதுரை வழியாக அனைத்து ரயில்களும் இயக்கப்படுகின்றன.
மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட மதுரை - திருமங்கலம் இடையே இரட்டை தண்டவாள இணைப்புப் பணிகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றதன் காரணமாக கடந்த 27 நாட்களாக மதுரை வழியே செல்லும் ரயில்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன.

ரயில்களின் நேரம் மாற்றம், ரயில்கள் ரத்து மற்றும் செல்லும் வழித்தடம் மாற்றம் ஆகியவை செய்யப்பட்டிருந்தன. இதனால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ரயில் பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். தேஜஸ் ரயில் திருச்சி வரை மட்டுமே இயக்கப்பட்டது. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் தண்டவாளப் பணிகள் அனைத்தும் முழுவதுமாக முடிவடைந்தன. இதனையடுத்து மீண்டும் பழையபடி மதுரை வழியாக ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேஜஸ் ரயில் நேற்றைய தினம் வழக்கம் போல மதுரை வரை இயக்கப்பட்டது.
மதுரை தேனி பயணிகள் ரயில் சேவை இன்று முதல் மீண்டும் இரு வழித்தடங்களிலும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மாற்றப்பட்ட நேரம் மற்றும் வழித்தடத்தில் இயங்கி வந்த ரயில்கள், ரத்து செய்யப்பட்ட ரயில்கள் அனைத்தும் பழையபடி வழக்கமான வழித்தடத்தில், வழக்கமான நேரத்தில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ரயில் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications