தர்பூசணியில் ரசாயனம் என்பது கார்ப்பரேட் சதி.. கூல்ட்ரிங்க்ஸ் கம்பெனியுடன் ஆபிசர் டீலிங்- Dr.சரவணன்
மதுரை: வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் பழமான தர்பூசணியில் ரசாயன கலப்பு இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியான நிலையில், அதன் விலையும் விற்பனையும் கடுமையாக சரிந்தது. இந்நிலையில், தர்பூசணி குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி பேசியது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும், இதில் கார்ப்பரேட் சதி இருப்பதாகக் கூறியுள்ளார் அதிமுக மருத்துவ இணை செயலாளருமான டாக்டர்.சரவணன்.
தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள அதிக அளவு சாலையோர கடைகளில் விற்பனை செய்யும் தண்ணீர் பழங்கள், இளநீர், இயற்கை குளிர்பானங்களை நாடி வருகின்றனர்.

இந்த நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலையோரம் விற்பனை செய்யும் தர்பூசணி கடைகளில் ஊசி மூலம் தண்ணீர் பழங்களில் வண்ண நிறமிகள் சேர்க்கப்படுவதாக கூறி வந்தனர். வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒரு சில வியாபாரிகள் தர்பூசணி பழங்களின் ரசாயனங்களை ஊசி மூலம் செலுத்தி செயற்கையாக இனிப்பு மற்றும் சிவப்பு நிறத்தை ஊட்டி மக்களுக்கு விற்பனை செய்வதாக திடீரென தகவல் பரவியது.
இதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தர்பூசணி பழங்களை கிலோ கணக்கில் பறிமுதல் செய்து அவற்றை அழித்தனர். இந்த நிலையில் தர்பூசணி பழங்களின் விற்பனையும் கடுமையாக சரிந்தது.
இந்நிலையில், தர்பூசணி குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி பேசியது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும், இதில் கார்ப்பரேட் சதி இருப்பதாகக் கூறியுள்ளார் அதிமுக மருத்துவ இணை செயலாளருமான டாக்டர்.சரவணன். இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழிடம் பேசிய அவர்," கோடை காலத்தில் உடலில் இருந்து வியர்வை வழியாக தண்ணீர் சத்து வெளியேறுவதால் வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளவும், ஹீட் ஸ்ட்ரோக் வராமல் தடுக்க இயற்க்கையாக விளையும் பழங்களை உட்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறோம்.
நான் மருத்துவராக சில கருத்துக்களை மக்களிடம் கூற விரும்புகிறேன். ஒவ்வொரு பழத்திலும் பிக்மன்டேஷன் என்ற இயற்கையாவே உருவாக கூடியது நிறமி உள்ளது. தண்ணீர் பழத்தில் சிவப்பு நிறமாக இருப்பதற்கு லைகோபின் சுரப்பதால் தண்ணீர் பழம் கூடுதல் சிவப்பாக இருக்கும். சிவப்பாக இருந்தால் மக்கள் பயப்படத் தேவையில்லை சாயம் பூசி இருப்பார்கள் என அஞ்ச வேண்டிய அவசியமில்லை.
எதையும் சந்தேகக் கண்ணுடன் பார்க்க வேண்டாம். தண்ணீர் பழம் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி பேசியது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாம் தான் விவசாயிகளுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். முழுக்க முழுக்க உண்மை. உணவு சார்ந்த விஷயத்திற்கு யாரோ நிர்ணயம் செய்கிறார்கள். பிரபல தனியார் குளிர்பான கம்பெனிகள் கோடைகாலத்தில் தங்களுடைய குளிர்பானங்கள் விற்பனை செய்வதில் பாதிப்பு வந்துவிடும் என நினைத்து இயற்கையாக விளையும் தர்பூசணி பழம் அனைத்து இடத்திலும் கிடைத்து விடுவதால் இது போன்று அதிகாரிகளை வைத்து பேசுகிறார்கள்.

பிரபல தனியார் குளிர் பானங்கள் அதன் செயல்பாடுகள் உற்பத்தி நிலையங்களுக்குச் சென்று ஆய்வு செய்வதில்லை. தண்ணீர் பழம் குறித்து அவர் பேசியதை தற்போது வாபஸ் பெற்றிருக்கிறார். பிரபல கம்பெனிகள் இது போன்ற கருத்துக்களை பொதுமக்களிடம் விமர்சனம் செய்தால் தங்களது வியாபாரம் பெருகும் என்ற நோக்கத்தில் இது போன்று செய்திருக்கலாம். செயற்கையாக விளையும் பழங்களுக்குள் தான் பிரச்சனையை தவிர இயற்கையாக விளையும் பழங்களில் நன்மை தான் உள்ளது. உடலுக்கு தேவையான நீர்ச்சத்து, புரோட்டின், கார்போஹைட்ரேட், விட்டமின்ஸ், மினரல்ஸ் உள்ளிட்ட அனைத்தும் உள்ளது.
வெயில் காலங்களில் மக்கள் அதிகம் தேடுவது தண்ணீர் பழங்கள் மற்றும் இயற்கை பானங்கள் விற்பனை செய்யும் கடைகளை தான் நாடுகிறார்களே தவிர மற்ற கடைகளை நாடுவதில்லை. உணவுப் பொருட்களில் அரசியல் என்பது காலம் காலமாக இருந்து வருகிறது சிறு குழந்தைகளுக்கு பால் பவுடர் வழங்குவதிலிருந்து உணவு அரசியல் ஆரம்பித்து விட்டது நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை பிரபல கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் முடிவு செய்கிறது. பழங்களுக்கு ஊசிகள் போடப்பட்டிருந்தால் அந்த பழங்களை ரொம்ப நாள் பாதுகாக்க முடியாது ஓரிரு நாட்களில் அழுகிவிடும். எனவே மக்கள் தைரியமாக தர்பூசணி பழங்கள் மற்றும் நீர்ச்சத்து பழங்களை வாங்கி உட்கொள்ளலாம்" என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications