மதுரையில் அமித் ஷா தங்கியுள்ள ஹோட்டல் அருகே தடையை மீறி பறந்த ட்ரோன்.. டக்கென சுதாரித்த போலீஸ்!
மதுரை: மதுரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டல் அருகே, தடையை மீறி ட்ரோன் பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் வருவதற்கு முன்பாக டிரோன் பறந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் பாஜக மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பது தொடர்பாக நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா பங்கேற்கிறார்.

இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று இரவு டெல்லியிலிருந்து தனி விமானத்தில் உள்துறை அமித்ஷா மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். பாஜக முக்கிய நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். அவரது வருகையையொட்டி விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற அவர், மதுரை சுற்றுச்சாலையில் சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கி உள்ளார்.
இன்று காலை 11 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் அமித்ஷா, பின்னர் ஹோட்டலுக்கு திரும்புகிறார். அங்கு தமிழக பாஜக மையக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது, 2026 சட்டப்பேரவை தேர்தல் வியூகம், பாஜகவுக்கு சாதகமான தொகுதிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
பின்னர் பிற்பகல் 3 மணியளவில் மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று, பல்வேறு ஆலோசனை வழங்குகிறார். இதில் மண்டல அளவிலான நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். மதுரையில் நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு பதில் தரும் வகையில் அமித்ஷாவின் பேச்சு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமித்ஷாவின் மதுரை வருகையையொட்டி விமான நிலையம், அவர் தங்கும் தனியார் ஹோட்டல், மீனாட்சி அம்மன் கோயில், ஒத்தக்கடையில் நிகழ்ச்சி நடைபெறும் மைதானம் உள்ளிட்ட இடங்களில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அமித்ஷாவின் மதுரை வருகையை ஒட்டி, மதுரையில் இன்றும் நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மதுரை மாநகரின் முக்கியமான இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரை சிந்தாமணியில் உள்ள தங்கும் விடுதிக்கு அமித்ஷா வருவதற்கு முன்பாக தடையை மீறி ட்ரோன் பறந்துள்ளது. இதையடுத்து ட்ரோன் பறக்கும் திசையை நோக்கி காவல்துறையினர் விரைந்துள்ளனர்.
ஆனால் போலீசார் செல்வதற்குள் ட்ரோன் கீழே இறக்கப்பட்டுள்ளது. இதனிடையே அந்தப் பகுதியில் எதுவும் சுப நிகழ்ச்சியில் ட்ரோன் பயன்படுத்தப்பட்டதா? அல்லது வேறு நபர்கள் மூலமாக பறக்க விடப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications