பெரும் பரபரப்பு.. மதுரை பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி! கொந்தளித்து திரண்ட இளைஞர்கள் - DYFI போராட்டம்
மதுரை பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். வகுப்புகளை நிறுத்தக்கோரி மாவட்ட தலைமை கல்வி அதிகாரி அலுவலகம் முன் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை: மதுரை பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வகுப்புகள் நடத்தப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அதனை நிறுத்தக்கோரி மாவட்ட தலைமை கல்வி அதிகாரி அலுவலகத்தில் புகாரளித்த இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள், பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்த அமைப்பாக ஆர்.எஸ்.எஸ். அறியப்படுகிறது. நாடு முழுவதும் கிளை பரப்பி இருக்கும் இந்த அமைப்புக்கு என பல்வேறு துணை அமைப்புகளும் உள்ளன.
இந்த அமைப்பு நாடு முழுவதும் ஷாகா என்ற பெயரில் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த பயிற்சியில் மதவெறி ஊட்டப்படுவதுடன், சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்கள் போதிக்கப்பட்டு ஆயுதப்பயிற்சிகள் அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
வட மாநிலங்களை போன்றே தமிழ்நாட்டின் பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஷாகா பயிற்சிகளை அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி சிறுவர்கள் தொடங்கி முதியோர்கள் வரை அனைத்து வயதினருக்கும் அளித்து வருகின்றனர். இதற்கு தடை விதிக்கவும் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி
குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்த வகை பயிற்சிகளை அளிக்க தேர்வு செய்யும் இடம் பள்ளி மற்றும் கல்லூரிகளாகவே இருந்து வருகின்றன. அங்கு படிக்கும் மாணவர்களுடன் சேர்த்து வெளியில் இருந்து ஆட்களை அழைத்து வந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தி வந்ததாக கடந்த காலங்களில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

ஆசிரியர்களும் உடந்தை
தமிழ்நாட்டின் பல்வேறு பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு சர்ச்சையாகி இருக்கின்றன. இதற்கு பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்கள் சிலருமே உடந்தையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது, குறிப்பாக சென்னை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், கோவை என பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

கோவை அரசு பள்ளி
கடந்த ஆண்டு அக்டோபர் கோவையில் உள்ள தேவாங்க அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஷாகா பயிற்சி வகுப்பு நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காக்கி டவுசர் அணிந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ வெளியானதை தொடர்ந்து பள்ளி வளாகம் முன் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி விளக்கம்
இதுகுறித்து கோவை மாநகர ஆணையர் பிரதாப் அளித்துள்ள விளக்கத்தில், "அரசு பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி நடைபெற்றது குறித்து உரிய விசாரணை நடத்த அறிவுறுத்தி உள்ளோம். காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பள்ளி தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டுள்ளோம்." என்றார். இது தொடர்பாக கோவை ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மதுரை பள்ளி
இந்த நிலையில் மதுரையில் உள்ள புகழ்பெற்ற பள்ளி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருவதாக வெளியான தகவல் மீண்டும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. இதனை அடுத்து இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பை சேர்ந்த இளைஞர்கள் மதுரை மாவட்ட தலைமை கல்வி அதிகாரியிடம் புகாரளித்தனர். அதை தொடர்ந்து அந்த அலுவலகத்திற்கு வெளியே பதாகைகளை ஏந்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications