“70 நாளா ஜெயில்ல இருக்கேன்.. ஜாமீன் கொடுங்க ப்ளீஸ்” அங்கித் திவாரி மீண்டும் மனு! ஐகோர்ட் முடிவு என்ன
மதுரை: லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபுவிடம், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாக கூறி ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

அமலாக்கத்துறை அதிகாரி, லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, அமலாக்கத்துறையின் மதுரை அலுவலகத்திற்குள் சென்று தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் விசாரணை நடத்திய பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.
அங்கித் திவாரி மீண்டும் ஜாமீன் கோரி மனு: இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் 2 முறை தள்ளுபடியானது. உயர் நீதிமன்ற மதுரை கிளையும் அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி அங்கித் திவாரி மனு தாக்கல் செய்துள்ளார்.
அங்கித் திவாரி தனது மனுவில், “நான் கைது செய்யப்பட்டு 70 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளேன். நான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது. என் மீதான வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கோரியுள்ளார்.
ஐகோர்ட் உத்தரவு: இந்த மனு நீதிபதி விவேக் குமார் சிங் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜராகி வாதிட்ட வழக்கறிஞர், அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது, ஜாமீன் வழங்கினால் இந்த வழக்கின் விசாரணை பாதிக்கப்படும் என்றார்.
இதையடுத்து, இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 28ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
முன்னதாக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், அங்கித் திவாரியை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தொடர்புடைய ஆவணங்கள், திண்டுக்கல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விவரங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விடாமல் விரட்டும் அமலாக்கத்துறை.. அங்கித் திவாரியை கஸ்டடியில் எடுக்க அப்பீல்.. ஐகோர்ட் கிளை ஆர்டர்!
கடந்த முறை நடந்தது என்ன?: ஏற்கனவே அங்கித் திவாரி ஜாமீன் மனு தாக்கல் செய்தபோது, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் பரபரப்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அங்கித் திவாரி லஞ்சம் வாங்கியதில் பல அமலாக்கத்துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது. அங்கித் திவாரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினால் மட்டுமே லஞ்சம் பெற்ற விவகாரத்தில் மேலும் பல அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து கண்டறிய முடியும் என லஞ்ச ஒழிப்புத்துறை வாதிட்டது.
மேலும், “அங்கித் திவாரியின் லேப்டாப்பில் இருந்து முக்கியமான ஆவணம் சிக்கி உள்ளது. அதில், தமிழகத்தில் லஞ்ச வழக்குகளில் சிக்கி உள்ள 75 பேரை பெயருடன் பட்டியலிட்டுள்ளார். இது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது. வழக்குகள் நிலுவையில் உள்ள பலரை மிரட்டி பணம் பெற்றுள்ளதாக அங்கித் திவாரியே தெரிவித்துள்ளார். காரில் அங்கித் திவாரி பணம் பெறும்போது அவருடைய குரல் மற்றும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது என வாதங்கள் வைக்கப்பட்டன.
அதேசமயம் அங்கித் திவாரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அங்கித் திவாரி மீது ஏற்கனவே எந்த வழக்கும் இல்லை. அவர் மீது வழக்கு புனையப்பட்டுள்ளது. பொய்யான குற்றச்சாட்டு அடிப்படையில் திட்டமிட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மத்திய அரசு அதிகாரி என்பதால் வழக்கின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவார். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. எனினும் அப்போது, அங்கித் திவாரி ஜாமீன் மனுவை நிராகரித்திருந்தது ஐகோர்ட்.












Click it and Unblock the Notifications