ஏன் அது தீண்டத்தகாததா? 1999 இல் என்ன நடந்தது.. மறந்துட்டீங்களா? வெட்கக்கேடு! சீறிய எடப்பாடி பழனிசாமி
மதுரை: 1999 ஆம் ஆண்டு பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்ததை மறந்துவிட்டீர்களா என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
மதுரை வலையங்குளத்தில் மாநாடு நடந்த நிலையில் அது எழுச்சி மாநாடாக மாறியதால் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் உள்ளனர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலையங்குளத்தில் உள்ள கருப்பண்ணசாமிக்கு நேர்த்திக் கடனாக மொட்டை அடித்துக் கொண்டு கறி விருந்து படைத்தார்.

அந்த வகையில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து அவர் சென்னைக்கு செல்ல மதுரை விமான நிலையத்திற்கு வந்த போது செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், கொடநாடு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கேரள குற்றவாளிகளுக்கு திமுககாரர்தான் ஜாமீன் வாங்கி கொடுத்துள்ளார். கொரோனா காலத்தில் நீதிமன்றங்கள் செயல்படாததால் வழக்கு விசாரணை தாமதமானது. ஆட்சி மாற்றத்திற்கு பின்னர், புதிய ஐஜி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.
290 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 90 சதவீத விசாரணை முடிந்தது. சட்ட போராட்டம் நடத்தி 50 ஆண்டு கால காவிரி நதி நீர் பிரச்சினையில் அதிமுக சாதக தீர்ப்பை பெற்றது. அதை அமல்படுத்த தங்களது "இந்தியா" வில் உள்ள காங்கிரஸ் ஆளும் கர்நாடகா நீர்பாசனத் துறை அமைச்சர் டி சிவக்குமாரை பெங்களூரில் சந்தித்த போது வலியுறுத்தாதது ஏன்?
தமிழக பிரச்சினையையே இந்தியா கூட்டணி அமைத்தால் சரி செய்ய முடியாத முதல்வர் ஸ்டாலின், இந்திய அளவில் பிரச்சினைகளை சரி செய்ய போவதாக சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. காவிரி நதி நீர்ப்பிரச்சினைக்காக எங்களது எம்பிக்களால் 22 நாட்கள் நாடாளுமன்றமே முடங்கி போனது.
காவிரி டெல்டா விவசாயிகள் துயர் துடைக்காத அரசாக திமுக விளங்குகிறது. அதிமுக மிகப் பெரிய கட்சி. 2 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா? அதனுடன் நீங்கள் 1999 ஆம் ஆண்டு கூட்டணி அமைத்து உடல்நிலை சரியில்லாத போது இலாக்கா இல்லாத அமைச்சராக உங்கள் முரசொலி மாறன் நீடித்தாரே. கட்சிக் கொள்கை வேறு, தேர்தல் கூட்டணி வேறு. அரசியல் சூழலுக்கு ஏற்றாற் போல் கூட்டணி அமைப்பதுதான் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை.
மகளிர் உரிமைத் தொகை விஷயத்தில் 27 மாதங்களாகியும் தராமல் இழுத்தடித்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மின் கட்டணம் உயர்ந்துவிட்டது. பதிவு கட்டணமும் உயர்ந்துவிட்டது. முதல்வருக்கு தமிழக மக்கள் மீது அக்கறையில்லை. தனது குடும்ப வளர்ச்சியிலேயே அக்கறை செலுத்துகிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications