5 கட்சி மாறியவர் அமைச்சர் செந்தில் பாலாஜி.. மதுரையில் சீறிய எடப்பாடி பழனிசாமி.. அருகில் சரவணன்!
அமைச்சர் செந்தில் பாலாஜி 5 கட்சிகளுக்கு மாறியவர் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
மதுரை: இந்தியாவிலேயே ஊழல் செய்ததற்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக தான் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அதேபோல் அமைச்சர் செந்தில் பாலாஜி ஐந்து கட்சிகளுக்கு மாறியவர் என்று விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற 8 பேர் தான் இன்று அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
அண்மையில் பாஜகவில் இருந்து விலகிய மருத்துவர் சரவணன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில் திருநெல்வேலியில் அதிமுக முக்கிய நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், எடப்பாடி பழனிசாமி மதுரை வந்தார்.
இதன் பின்னர் அதிமுகவில் இணைந்த மருத்துவர் சரவணன் தலைமையில் மாற்று கட்சியைச் சேர்ந்த 10 ஆயிரம் பேர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

எடப்பாடி பழனிசாமி பேச்சு
இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், சாதாரண தொண்டனும் உச்சத்திற்கு வரக் கூடிய வகையில் செயல்படும் ஒரே கட்சி அதிமுக தான். ஆனால் திமுகவில் குடும்ப ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. குடும்ப ஆட்சியின் டைரக்டர்களாக பலரும் இருக்கிறார்கள். கலெக்ஷன், கமிஷன், கரப்சன் ஆகியவற்றை திமுகவினர் சரியாக செய்து வருகிறார்கள். அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது.

திமுக பற்றி பேச்சு
தேர்தல் வாக்குறுதிகளில் 85% நிறைவேற்றப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய்யை மெய்பிக்க பார்க்கிறார். 500க்கும் மேற்பட்ட அறிவிப்புகளில், 90 சதவிகிதத்திற்கும் மேலான அறிவிப்புகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஊழலை பற்றி பேசுவதற்கு எனக்கு தகுதியில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேசி இருக்கிறார். ஊழலை பற்றி பேசுவதற்கு அதிமுகவிற்கு மட்டுமே தகுதி இருக்கிறது.

செந்தில் பாலாஜி
ஊழலுக்காக இந்தியாவில் ஆட்சி கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுகவின் ஆட்சி தான். ஊழல் என்று சொன்னாலே திமுக தான் நினைவுக்கு வரும். ஊழல் செய்வதில் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு தான். அதேபோல் அதிமுகவில் இருந்தவர்கள் 8 பேர் தான், இன்று திமுகவில் அமைச்சர்களாக இருக்கிறார்கள். செந்தில் பாலாஜி என்று ஒருவர் அமைச்சராக இருக்கிறார்.

ஜெயலலிதாவின் வாரிசு
5 கட்சிகளுக்கு சென்று வந்தவர். 5 ஆண்டுகளில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சியிலும் வெற்றிபெற்று இருக்கிறார். இன்று அவர் தான் முதன்மை அமைச்சராக வலம் வருகிறார். அவர்கள் அதிமுகவை பற்றி பேசுவதற்கு தகுதியில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வாரிசு தான் நாம் அனைவரும். அதிமுகவின் 33 ஆண்டுகால ஆட்சியில் தான் தமிழ்நாட்டில் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. கல்வியில் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு அதிமுக தான் காரணம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications