எடப்பாடி டெல்லி போனது என்ன உலக அதிசயமா? மதுரையில் திடீரென டென்ஷனான ஓபிஎஸ்!
மதுரை: எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றது என்ன உலக அதிசயமா என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கேள்வி எழுப்பி இருக்கிறார். ஆதரவாளர்கள் மாற்று கட்சியில் இணைந்தது குறித்த கேள்விக்கும், கூட்டணி நிலைப்பாடு தொடர்பான கேள்விக்கும் பதில் அளிக்க முடியாமல் ஓபிஎஸ் சிரித்து கொண்டே நகர்ந்து சென்றார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக கூட்டணியை விரிவுபடுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. நேற்றைய தினம் அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக இணைந்த சூழலில், புதிய தமிழகம் கட்சியும் அதிமுக கூட்டணியை நோக்கி நெருங்கி இருக்கிறது. நாளை தேமுதிகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே பாமக கூட்டணியை உறுதி செய்த கையோடு, எடப்பாடி பழனிசாமி டெல்லியில் முகாமிட்டுள்ளார். நேற்றிரவு மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த ஆலோசனையில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுக - பாஜக கூட்டணியில் சேர்க்கும் வாய்ப்பு குறித்து பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஆனால் நேற்றைய தினம் ஓபிஎஸ் அளித்த பேட்டி பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் ஓபிஎஸ் வழக்கமாக எந்த கேள்விக்கும் முகம் சுளிக்காமல் உற்சாகமாக பதில் அளிப்பார். அதேபோல் தங்களின் அடுத்தக்கட்ட திட்டங்கள் குறித்தும் தெளிவாக சொல்லிவிட்டு செல்வார். ஆனால் நேற்று செய்தியாளர்களின் எந்த கேள்விக்கும் பதில் அளிக்க முடியாமல் தடுமாறினார்.
ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் தொடர்பான கேள்விக்கு, அது என்ன உலக அதிசயமா என்று கோபமாக கேள்வி எழுப்பினார். பின்னர் நீங்கள் டெல்லி செல்ல வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, நல்ல வேளை.. அமெரிக்கா செல்ல வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்கவில்லை என்று தனக்கு தானே கேள்வி எழுப்பி சிரித்து விலகி சென்றார்.
அதேபோல் மனோஜ் பாண்டியனை தொடர்ந்து ஜேசிடி பிரபாகர் தவெகவில் இணைந்திருக்கிறாரே என்ற கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை. அமமுக, தேமுதிக உள்ளிட்டோருடன் அதிமுக பேசி வருவதாக சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கும், மறைமுகமாக பேசுகிறார்கள் போல என்று பதில் அளித்து சென்றார்.












Click it and Unblock the Notifications