எங்களை மட்டும் ஏன் மறிக்கிறீங்க.. தேனியில் தங்க தமிழ்செல்வனின் காரை சோதித்த அதிகாரிகளுடன் மோதல்
மதுரை: தேனி தொகுதி அமமுக வேட்பாளர் தங்க தமிழ் செல்வனின் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.ப.ரவீந்திரநாத், தினகரனின் அமமுக சார்பில் தங்க தமிழ் செல்வன், திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது.
குறிப்பாக அதிமுக வேட்பாளர் ஓ.ப.ரவீந்திரநாத் மற்றும் அமமக வேட்பாளர் தங்க தமிழ் செல்வன் இடையே வாக்காளர்களை கவர்வதில் கடும் போட்டி நிலவுகிறது. நேற்று உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ரவீந்திரநாத் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்
ரோபோக்கள் மூலம் பாடம் நடத்துவோம் : அமைச்சர் செங்கோட்டையன் பலே ஐடியா
சாமி தரிசனம்
இந்நிலையில் தேனி தொகுதி அமமுக வேட்பாளர் தங்க தமிழ் செல்வன் செல்வன் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட பாலமேடு அருகே உள்ள வளையப்பட்டி, மஞ்சள் மலை கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
பணம் பட்டுவாடா
பிரச்சாரம் வளையப்பட்டியில் துவங்கிய உடனேயே ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ரூ.50 பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவரது தங்க தமிழ் செல்வனின் பிரச்சார வாகனம் பாலமேடு அருகே வந்த போது, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
கார்கள் வழிமறிப்பு
அதிகாரிகள், தங்க தமிழ் செல்வனின் பிரச்சார வாகனம் மற்றும் அவருடைய சொந்த வாகனம் கட்சிக்காரர்களின் வாகனம் என அனைத்து வாகனங்களையும் சோதனையிட முற்பட்டனர். அப்போது அதிமுகவினர் ஓட்டுக்கு 500, 1000 என பட்டுவாடா செய்யும் போது கண்டு கொள்ளாத நீங்கள், எங்களை மட்டும் எப்படி வழிமறிக்கலாம் என அதிகாரிகளுடன் அமமுகவினர், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது எங்கள் கடமை
போலீசாரோ இது எங்கள் கடமை, எனவே எங்கள் கடமையை செய்ய விடுங்கள் என அமமுகவினரிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதன் பின்னர் ஒவ்வொரு வாகனத்தையும் போலீசார் சோதனையிட்டனர். போலீசாரின் சோதனையில் எந்த ஒரு பணமோ, பொருளோ சிக்கவில்லை. இதனால் பாலமேட்டில் சிறிது நேரம் பரபரப்பும், பதற்றமும் காணப்பட்டது.