Election Exclusive: மதுரை மத்தியில் தலைக்கு மேல் கத்தி.. குட்டையை குழப்பும் அழகிரி & கோ! அதிரடி ஆக்ஷனில் இறங்கிய திமுக!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதுரை மத்திய தொகுதி தமிழகத்தில் மிக முக்கியமான 'விஐபி' தொகுதியாக மாறியுள்ளது. இந்த தொகுதியில் திமுக சார்பில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றுள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீண்டும் களமிறங்கியுள்ள நிலையில், அவருக்கு எதிராக அதிமுக கூட்டணியில் திரைப்பட இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி போட்டியிட உள்ளார். இதனால் இந்த தொகுதியில் கடும் போட்டி நிலவுகிறது. அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக களத்தில் இறங்காத திமுகவினர், இப்போது களத்தில் இறங்கி அடித்து வருகின்றனர். இதற்கு முக அழகிரியின் ஆதரவாளர்கள் தான் காரணம் என சொல்லப்படுகிறது.
2026 தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான கூட்டணியில் ஏ.சி. சண்முகம் தலைமையிலான புதிய நீதிக் கட்சி இணைந்துள்ளது. அந்த கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு தொகுதியாக மதுரை மத்திய தொகுதி தேர்வு செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
குறிப்பாக, இந்த தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் சுந்தர் சி போட்டியிடுவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மத்திய தொகுதியில் இதற்கு முன் நடைபெற்ற இரண்டு தேர்தல்களிலும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெற்றி பெற்றுள்ளார்.

2016 தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர், 2021 தேர்தலில் எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருந்த சூழலில் எளிதாக வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. இதனால், இந்த முறை அவரின் வெற்றி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில், திமுக தரப்பில் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, மதுரை மத்திய தொகுதியில் எதிர்ப்பாராத சவால்கள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக கருதி, திமுக மேலிடம் 21 பேர் கொண்ட சிறப்பு தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளது.
இந்த குழுவில் பல முக்கிய நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர். சமீபத்தில் கட்சியில் இணைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகளுக்கும் இதில் இடம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தல் பணிக்குழுவின் முக்கிய நோக்கம், தொகுதியில் கட்சியின் வாக்கு வலிமையை அதிகரிப்பதோடு, எதிரணியின் செயல்பாடுகளை சமாளிப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, மதுரை பகுதியில் சில முக்கிய அரசியல் கோஷ்டிகள் செயல்படுவதால், அதன் தாக்கத்தை குறைக்கும் வகையில் இந்த குழு செயல்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஒவ்வொரு வார்டிலும் அதிக வாக்குகளைப் பெற நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலில் கிடைத்த வாக்கு வங்கியை மீண்டும் உறுதிப்படுத்தும் நோக்கத்துடன், இந்த முறை கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், அதிமுக கூட்டணி தரப்பும் இந்த தொகுதியை மிகவும் முக்கியமாகக் கருதி தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகிறது. சுந்தர் சி போட்டியிடுவதால் பொதுமக்களிடையே ஆதரவு அதிகரித்துள்ளதாகவும், கட்சி தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்றத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மதுரை மத்திய தொகுதி இந்த முறை சாதாரண தொகுதியாக இல்லாமல், முக்கிய அரசியல் மோதல் நடைபெறும் 'விஐபி' தொகுதியாக மாறியுள்ளது.
ஒரு புறம் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மறுபுறம் புதிய முகமாக களமிறங்கும் சுந்தர் சி களமிறங்கும் நிலையில், முக அழகிரி ஆதரவாளர்கள் சில அதிமுகவுக்கு தாவியுள்ளனர். இதனால் அங்கு பிரச்சினை எழும் என்பதால் தான், திமுக தலைமை தேர்தல் பணிக்குழுவை அறிவித்துள்ளது என்கின்றனர் மதுரை திமுகவினர்.












Click it and Unblock the Notifications