அதிமுக தொண்டர்களின்.. உள்குத்தும் வெளிக்குத்தும் கட்சியை காலி செய்துவிட்டது.. ஆர்பி உதயகுமார் பீலிங்
மதுரை: தமிழ்நாட்டில் அதிமுகவை வெல்லும் சக்தி இல்லை என்றும் தொண்டர்களின் உள்குத்து & வெளிக் குத்தாலேயே தேர்தலில் தோல்வியடைந்ததாகவும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. தனிப் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பெற்ற திமுகவின் தலைவர் ஸ்டாலின் முதல்வரானார்.
இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வென்றது. அதிலும் மேற்கு மண்டலத்தைத் தவிர மற்ற இடங்களில் அதிமுகவின் செல்வாக்கு குறைந்திருந்தது தெளிவாகத் தெரிந்தது.

ஆலோசனைக் கூட்டம்
இந்நிலையில், மதுரை திருமங்கலத்தில் ஜெயலலிதா கோவில் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மதுரை மேற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சட்டசபைத் தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் எனப் பொதுமக்கள் தீர்ப்பு அளிப்பார்கள் என எதிர்பார்த்து இருந்தோம் எனத் தெரிவித்தார்.

கரும்பு வாங்கியவர்கள் ஓட்டுப் போட்டிருந்தால் கூட
தொடர்ந்து பேசிய அவர், "ஆனால் நாம் எதிர்பார்த்து மாதிரி மக்கள் தீர்பை வழங்கவில்லை. மாறிவிட்டது. மக்களின் தீர்ப்பு அவர்களின் எண்ண ஓட்டத்திற்குப் பொருந்தும் வகையில் இல்லை. இது குறித்து ஆய்வு செய்யத் தொடங்கும்போது தான் நமக்குப் பல விஷயங்கள் தெரிய வருகிறது. பொங்கலுக்குக் கரும்பும் 2500 ரூபாயும் வாங்கி சென்ற அனைத்து குடும்பங்களில் இருந்தும் ஒருவர் ஓட்டுப் போட்டிருந்தால் கூட தொடர்ந்திருக்கும்.

Array
ஒரு தொகுதியில் தோல்விக்குக் காரணம் என்ன என்று கேட்டால் அதிமுக தொண்டர்களின் உள்குத்து என்கிறார்கள். மற்றொரு தொகுதியில் கேட்டால் வெளிக்குத்து என்கிறார்கள். இப்படி தொண்டர்களின் உள்குத்து மற்றும் வெளிகுத்து காரணமாக தான் நாம் தோல்வியடைந்தோம். கடந்த தேர்தலில் நமக்கு 1.46 கோடி பேர் வாக்களித்துள்ளனர். நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டு இருந்தால் அதிமுக என்ற இயக்கத்தை யாரும் வென்றிருக்க முடியாது.

குறைவான வாக்குகள்
அதிமுகவைத் தோற்கடிக்கும் சக்தி எங்கேயும் இல்லை. எம்ஜிஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி மக்கள் நமக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தார்கள். குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே நாம் தோல்வியடைந்தோம். இன்னும் வெறும் 2 லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று இருந்தால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைத்து இருப்போம்.

திமுக ஆட்சி
திமுக ஆட்சியில் விலைவாசி உயரத் தொடங்கிவிட்டது. சமையல் எரிவாயு 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று திமுகவினர் கூறினர். ஆனால் குறைக்கவில்லை. நீட் தேர்வும் தொடர்கிறது. இப்படி திமுகவின் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மக்கள் நமக்கு இப்போது கேள்வி கேட்கும் பொறுப்பை அளித்துள்ளனர். ஆனால் சட்டசபையில் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டு, எதிர்க்கட்சிகளின் குரல்கள் நெரிக்கப்படுகிறது" என்றார்.

தொண்டர்கள் அதிர்ச்சி
பொதுவாகத் தேர்தலில் தோல்வி என்றால் கட்சி நிர்வாகிகள் மீதுதான் தலைவர்கள் குறை சொல்வார்கள். நிர்வாகிகள் மாற்றுக் கட்சியினருக்குச் சாதகமாகச் செயல்பட்டனர், சரியாகக் களத்தில் வேலை செய்யவில்லை எனக் குற்றம்சாட்டுவார்கள். ஆனால் ஆர் பி உதயகுமார் அடுத்த லெவலுக்கு சென்று தொண்டர்களின் உள்குத்து தான் தோல்விக்குக் காரணம் எனக் கூறியுள்ளது, அதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications