அந்தியோதயா ரயிலில் உள்ளத்தை அள்ளித்தா காமெடி..அடேய் டுபாக்கூரா நீ.! டிடிஇ கிட்டயே டிக்கெட் கேட்ட மணி
மதுரை: அந்தியோதயா விரைவு ரயிலில் பயணிகளிடம் டிக்கெட்டை சோதனை செய்த போலி டிடிஇ பிடிபட்டார். தாம்பரத்திலிருந்து புறப்பட்ட அந்தியோதயா ரயில் திருச்சி வந்தபோது டிக்கெட் பரிசோதகரிடமே அவர் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு தினமும் இரவு 11 மணிக்கு அந்தியோதயா ரயில் இயக்கப்படுகிறது. இந்தியாவிலேயே தினமும் இயக்கப்படும் ஒரே அந்தியோதயா ரயில் இது மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

15 ரயில் பெட்டிகளுடன் இந்த ரயில் முன் பதிவில்லாமல் முழுக்க முழுக்க அன்ரிசர்வ் பயணிகளுக்காக இயக்கப்படுகிறது. இரவு பதினோரு மணிக்கு புறப்படும் இந்த ரயில் அடுத்த நாள் 12.50 மணிக்கு நாகர்கோயில் சென்றடைகிறது.
தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் இந்த ரயில் அங்கிருந்து கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்சி வந்து அங்கிருந்து திண்டுக்கல், மதுரை வழியாக நாகர்கோயில் செல்லும். செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பயணிகள் இந்த ரயிலை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ரயிலை பற்றிய செய்தி தான் தற்போது ஊடகங்களில் இடம் பிடித்திருக்கிறது. உள்ளத்தை அள்ளித் தா படத்தில் வரும் கவுண்டமணியை போல தாம்பரத்திலிருந்து புறப்பட்ட அந்தியோதயா ரயில் திருச்சி வந்தபோது டிக்கெட் பரிசோதகரிடமே அவர் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா ரயிலில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) அன்று பயணிகளிடம் பயணச்சீட்டு பரிசோதனை செய்த போலி பயணச்சீட்டு பரிசோதகர் கைது செய்யப்பட்டார். திருச்சி - திண்டுக்கல் இடையே நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா பயணித்துக் கொண்டிருந்தது.
அப்போது கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த 30 வயது சி.மணிகண்டன் என்பவர் பயணிகளிடம் பயணச்சீட்டு பரிசோதனை செய்து கொண்டிருந்தார். மணிகண்டன் பயண சீட்டு பரிசோதகர் போல வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்திருந்தார். மேலும் போலி அடையாள அட்டை, பெயர் மற்றும் பதவி பெயர் கொண்ட பேட்ஜும் அணிந்திருந்தார்.
இந்நிலையில் அதே பெட்டிக்கு உண்மையான டிடிஇ வந்துள்ளார். ரயில்வே ஊழியர் இல்லாத ஒருவர் பயண சீட்டு பரிசோதனை செய்கிறார் என்பதை கவனித்த மதுரை பயணச்சீட்டு பரிசோதகர் சரவணச்செல்வி தனது மேல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இந்த தகவல் ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் ரயிலில் மணிகண்டனை கைது செய்து, மதுரை ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளரிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைத்தனர். மதுரை ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் உரிய நீதிமன்ற நடவடிக்கைக்காக திண்டுக்கல் அரசு ரயில்வே போலீசாரிடம் மணிகண்டனை ஒப்படைத்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பல ஆண்டுகளாகவே மணிகண்டன் இவ்வாறு வேறு வேறு ரயில்களில் பயணம் செய்து அபராதம் என்ற பெயரில் ரயில் பயணிகளிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications