மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே மீண்டும் தீ விபத்து.. தீயை அணைக்க போராடும் தீயணைப்பு வீரர்கள்!
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே, கடந்த 17ஆம் தேதி தீ விபத்து நடந்த பிளாஸ்டிக் குடோனில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில், தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே தெற்கு மாசி வீதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடை சுமார் 30 வருடங்களுக்கு மேலாக அந்த இடத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஒருவர் இந்தக் கடையை நடத்தி வருகிறார்.

தரைத்தளத்தில் பிளாஸ்டிக் விற்பனை கடையும் மேல்தளத்தில் குடோனும் உள்ளன. இந்நிலையில் இந்த பிளாஸ்டிக் குடோனில் கடந்த ஜூலை 17ஆம் தேதி காலை திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகம் காரணமாக தீ அடுத்தடுத்த கடைகளுக்கும் வேகமாகப் பரவியது. தீ வேகமாகப் பரவி, அப்பகுதி முழுக்க கரும்புகை சூழ்ந்தது.
தகவல் அறிந்து, தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. திடீர் நகர், அனுப்பானடி, தல்லாகுளம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விரைந்த 5 தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. 7 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் அதே பிளாஸ்டிக் குடோனில் இன்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ வேகமாகப் பரவி கரும்புகை எழுந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றியுள்ள பழமையான கட்டிடங்களில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications