மதுரை மட்டன் விருந்து.. தமிழகத்தில் முதல்முறையாக இப்படியொரு அசத்தல்.. உயரத்தில் பறந்த விஜய்யின் கொடி
சென்னை: தமிழகத்திலேயே முதல்முறையாக 50 அடி உயரத்துக்கு கட்சி கொடியேற்றி வைக்கப்பட்டு, சமபந்தி விருந்தும் பரிமாறப்பட்டுள்ளது. விஜய் கட்சி சார்பாக, மதுரையில் நடந்துள்ள இந்த விழா, பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை விஜய் தொடங்கினார்.. ஆனால், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அப்போதே அறிவித்துவிட்டார்.

கட்சி கொடி: இதையடுத்து, கடந்த வாரம், தன்னுடைய கட்சிக்கொடியை விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.. தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியில் மேலும், கீழும் சிவப்பு வண்ணமும், நடுவில் மஞ்சள் வண்ணமும் உள்ளது. இதில் மஞ்சள் நிறத்தின் மத்தியில் வாகைப் பூவும், அதன் இருபுறங்களிலும் முன்னங்காலை தூக்கியபடி, பிளிறும் 2 யானைகளின் உருவமும் பொறிக்கப்பட்ட கொடியை நடிகர் விஜய் அறிமுகப்படுத்தியிருந்தார்.
அதாவது, கொடியின் மேலும், கீழும் அடர் சிவப்பு நிறத்திலும், நடுவில் மஞ்சள் நிற பின்னணியில் வாகை மலரை சுற்றி பச்சை, நீல நிற நட்சத்திரங்கள் மிளிர, அதன் இருபுறமும் கம்பீரமாக கால்களை உயர்த்தியபடி இரு யானைகள் நிற்பதுபோல கொடி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனால், கட்சி கொடி அறிமுகமானதுமே, சர்ச்சைகளும், பரபரப்புகளும் வெடிக்க துவங்கிவிட்டன.. இது தொடர்பான சலசலப்புகள் இன்னும் அடங்கவில்லை.
முதல் மாநாடு: இதற்கு மாநாடு பரபரப்பு தொற்றிக் கொண்டுவிட்டது.. அடுத்த மாதம் கட்சியின் மாநாடு நடைபெறும் என்றும், அந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும் விஜய் அறிவித்திருப்பதால், முதல்மாநாடு எங்கே நடைபெற போகிறது? என்ற ஆர்வம் எழுந்துள்ளது. தஞ்சை, சேலம், திருச்சி பகுதியிலும் வேறு இடங்களை பார்த்து வருவதாகவும், இன்னும் இதுகுறித்து உறுதியாக முடிவெடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், மதுரையில் நடத்தப்பட்ட விழாவொன்று இணையத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.. மதுரை கருப்பாயூரணியை அடுத்துள்ள பகுதி ஓடைப்பட்டி.. இங்கு விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி அறிமுக விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
போஸ்டர்: இந்த விழாவில், கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், 50 அடி உயர கொடி ஏற்றிவைக்கப்பட்டு, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மதுரை ஓடைப்பட்டி பகுதியில், 50 அடி உயர கொடியை மதுரை மாவட்ட(வடக்கு) தலைவர் விஜய் அன்பன் கல்லனை ஏற்றி வைத்தார்..
இந்த நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு 35000 ரூபாய் கல்வி உதவித்தொகையும், 5 பேருக்கு குலுக்கள் முறையில் ஆட்டு குட்டிகளும் நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டன.. மேலும் ஒருவருக்கு இஸ்திரி பெட்டி வண்டியும், 50க்கும் மேற்பட்டோருக்கு முதியோர் உதவி தொகையும் வழங்கப்பட்டது. இறுதியில், கொடி அறிமுக விழாவை முன்னிட்டு, 1000 பேருக்கு கமகமவென சமபந்தி அசைவ விருந்து பரிமாறப்பட்டது.
போலீஸ் விளக்கம்: அதுமட்டுமல்ல, முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் விஜய் கட்சியின், 50 அடி உயரக் கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது... மாநகராட்சியின் தடையில்லா சான்றிதழை இணைக்காததால் அனுமதி ரத்து செய்யப்படுவதாக காவல்துறை தரப்பில் விளக்கமும் தரப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழகத்திலேயே முதல்முறையாக 50 அடி உயர கொடி ஏற்றி வைத்து 1000 பேருக்கு சமபந்தி அசைவ விருந்து வழங்கப்பட்டது பலரது கவனத்தையும் குவித்துள்ளது.












Click it and Unblock the Notifications