இங்க தான் நீங்க ‘கிராஸ்’ பண்ணனும்..தீவிரவாதிகள் மாதிரி நடத்துறீங்களே! செல்லூர் ராஜூவுக்கு வந்த கோபம்
மதுரை: தென்னகத்தின் நுழைவாயிலான கப்பலூர் டோல்கேட்டில் தான் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்ஆர் உள்ளிட்ட தென் மாவட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் போக வேண்டும் எனவும், மதுரையில் கூட இரண்டு அமைச்சர் உள்ளார்கள் எத்தனை பேர் இருந்தும் மக்கள் பிரச்சனைக்காக எந்த எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுரை அருகே உள்ள கப்பலூர் டோல்கேட் அகற்றக் கோரி உண்ணாவிரதம் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டார். தொடர்ந்து அவரை மாலை போலீசார் விடுவித்தனர்.

இந்நிலையில் ஆர்பி உதயகுமாரை உள்ளிட்ட அதிமுகவினரை மதுரையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சொல்லூர் கே.ராஜூ சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை செல்லூர் ராஜு சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்," கப்பலூர் சுங்க சாவடியை அகற்ற ஒட்டுமொத்த மக்களும் கடைஅடைப்பு போராட்டம் நடத்தியுள்ளார். இதே எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் ஆதார் எண் இருந்தால் போதும் எத்தனை முறை போகலாம் வரலாம் என்ற நிலை இருந்தது. தற்போது மூன்று ஆண்டுகளாக கட்டண விலக்கு ரத்து செய்யப்பட்டதாக கூறுகிறார்கள். இதே ஸ்டாலின் எதிர்க்கட்சிதலைவராக இருந்த பொழுது கிராம சபை கூட்டத்தை கூட்டினர்.
அப்போது டோல்கேட்டை அகற்றப்படும் என்று கூறினார். அதனை தொடர்ந்து தேர்தல் வாக்குறுதியில் கூறினார். திமுக வாக்குறுதி அல்வா கொடுத்தது போல இப்போதும் கொடுத்துள்ளது. திமுக எப்போதும் மக்களை கவர தான் வாக்குறுதி கொடுப்பார்கள். ஆனால் நிறைவேற்ற மாட்டார்கள். கடந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் எந்த பிரச்சினையும் இல்லாமல் ஒரு சிறப்பான ஆட்சியை செய்தார். தற்பொழுது இந்த மூன்று ஆண்டுகளில் கட்டண பிரச்சனையில் மக்களிடத்தில் மோசமாக நடந்து வருகிறார்கள்.
இதற்காக இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஆர்.பி. உதயகுமார் போராட்டத்தை முன்னிறுத்தி உள்ளார் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை ,மாவட்ட நிர்வாகம் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு போய் சொல்ல வேண்டும், முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதியை காக்க வேண்டும்.
தென்னகத்தின் நுழைவாயில் இந்த டோல்கேட்டில் தான் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே கே எஸ் ஆர் போக வேண்டும் தென் மாவட்டதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் போக வேண்டும். மதுரையில் கூட இரண்டு அமைச்சர் உள்ளார்கள் எத்தனை பேர் இருந்தும் மக்கள் பிரச்சனைக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெண்கள் கூட இங்கே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த அரசு கொடுங்கோல் அரசாக, நியாயமற்ற அரசாங்கம் உள்ளது. அதே போல் காவல்துறை அட்டூழியம் உள்ளது நேற்று முதல் இந்த போராட்டத்தை நசுக்கும் வண்ணம் கைது செய்யப்பட்டதாக கூறுகிறார்கள். இன்றைக்கு தீவிரவாதிகளை போல அடக்கு முறையை கையாண்டு வருகிறார்கள். இந்த ஆர்ப்பாட்டம் குறித்து எடப்பாடியார் மூன்று முறை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.பி.உதயகுமாரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். இதற்கு என்றைக்கும் உறுதுணையாக இருந்து இந்த போராட்டத்திற்கு எடப்பாடியார் தீர்வு காண்பார்" என கூறினார்.












Click it and Unblock the Notifications