முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடிக்கச் சொன்னார் ராமதாஸ்.. இப்ப என்னாச்சு? செல்லூர் ராஜு அட்டாக்!
மதுரை: என் குடும்பத்தில் யாராவது கட்சியில் பொறுப்புக்கு வந்தால் முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடிக்கச் சொன்னார் ராமதாஸ் என விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. அதிமுகவை பொறுத்தவரை, தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் 33 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது அதிமுக.

மதுரை லோக்சபா தொகுதியில் டாக்டர் சரவணன் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில், மதுரையில் சரவணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் பாமகவை வெளுத்து வாங்கியுள்ளார் செல்லூர் ராஜூ.
பாமக: பாமக, அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் திடீரென இரவோடு இரவாக பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிரடியாக அறிவித்தது பாமக. பாஜக கூட்டணியில் 10 இடங்களில் போட்டியிடுகிறது பாமக. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரக் களத்தில் பாமக - அதிமுக தலைவர்கள் மாறி மாறி கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அந்தவகையில், அண்மையில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "1996ஆம் ஆண்டில் ஊழல் வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற போது, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அக்கட்சிக்கு உயிர் கொடுத்தது பாமக தான். 2019ல் அதிமுகவுடன் பாமகவுடன் கூட்டணி வைக்காவிட்டால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக நீடித்திருக்க முடியாது" என்று கூறினார்.
அதிமுக கொதிப்பு: அன்புமணியின் இந்தப் பேச்சு அதிமுகவினரிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ, "அன்புமணி ராமதாஸின் பேச்சை எல்லாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாம். இங்கேயும் அங்கேயும் பேரம் பேசி, எங்கே தங்களுக்கு அதிகமான தொகை கிடைக்கிறதோ அந்தப் பக்கம் சென்றுள்ளார்கள். அன்புமணி மனைவி செளமியா அன்புமணி போட்டியிடும் தருமபுரி தொகுதியில் வேலை செய்ய கூட பூத் கமிட்டி ஆட்கள் இல்லை. இதுதான் கள நிவலரம். இந்த மன விரக்தியில் அதிமுகவை பற்றி அன்புமணி பேசி வருகிறார்.
சவுக்கால் அடிக்கச் சொன்னார் ராமதாஸ்: பாமகவால் அதிமுக ஆட்சி அமைத்தது என்று சொன்னால் அது மிகப்பெரிய ஜோக் தான். பாமக கட்சிக்கு தமிழகத்தில் சில மாவட்டங்களில் மட்டுமே வாக்குகள் உள்ளன. தென் மாவட்டங்களில் தொண்டர்களோ, செல்வாக்கோ, வாக்கோ அக்கட்சிக்கு கிடையாது. அப்படிப்பட்ட கட்சி அதிமுகவை தாங்கியது என்று சொன்னால் கேலிகூத்தாகத் தான் உள்ளது.
இன்று கருணாநிதி குடும்பம் எப்படியோ, அப்படித்தான் ராமதாஸ் குடும்பமும். ராமதாஸ் கட்சி ஆரம்பிக்கும்போது, "என் குடும்பத்தில் யாரும் கட்சியில் பொறுப்புக்கு வரமாட்டார்கள். அப்படி வந்தால் முச்சந்தியில் நிறுத்தி என்னைச் சவுக்கால் அடிங்க" என்று ராமதாஸ் சொன்னார். இன்று என்ன நடந்திருக்கிறது என்று பாருங்கள். அன்புமணி வற்புறுத்தலால் இன்று பாஜகவுடன் கூட்டணியில் சேர்ந்துள்ளார் ராமதாஸ்" எனத் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கியபோது 5 உறுதிகளை அளித்தார். "வாழ்நாளில் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். என் குடும்பத்தை சேர்ந்த யாரும் கட்சியில் எந்தப் பொறுப்பிற்கும் வரமாட்டார்கள். இதை மீறினால் முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்' என்று பேசினார். அதைச் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார் செல்லூர் ராஜூ.












Click it and Unblock the Notifications