சாம்பார் சாதம் ரூ.50, பூரி 20 ரூபாய்.. மகிழ்ச்சியில் துள்ளும் விருதுநகர் டூ திண்டுக்கல்.. வேற லெவல்
மதுரை: 350 கிராம் அளவுள்ள தயிர் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம் அல்லது சாம்பார் சாதம் இதில் எது வாங்கினாலும், ரூ.50 ரூபாய்தானாம்.. எங்கே தெரியுமா? இந்த சூப்பர் அதிரடியை வெளியிட்டிருப்பது தெற்கு ரயில்வே நிறுவனமாகும்.
தெற்கு ரெயில்வே மதுரை கோட்ட அலுவலகம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில் உள்ளதாவது: "2-ம் வகுப்பு பொதுப் பெட்டிகளில் பயணம் செய்யும் ரெயில் பயணிகளுக்கு சுகாதாரமான, சுவையான உணவு வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மதுரை கோட்டம்: மதுரை கோட்டத்தில், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ரெயில் நிலையங்களில் இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லாத ரெயில் பெட்டிகள் நிற்கும் இடங்களில் குறைந்த விலை உணவு விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 250 கிராம் அளவுள்ள தயிர் சாதம், புளி சாதம், சாம்பார் சாதம் அல்லது பருப்பு கிச்சடி ஆகியவற்றில் ஏதாவது ஒன்று ஊறுகாயுடன் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல 350 கிராம் அளவுள்ள தயிர் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம் அல்லது சாம்பார் சாதம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று ரூ.50-க்கு விற்கப்படுகிறது.
பூரி, பஜ்ஜி: 325 கிராம் பூரி, பஜ்ஜி ஆகியவை ஊறுகாயுடன் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 200 மி.லி. குடிநீர் பாட்டில் ஒன்று ரூ.3-க்கு விற்கப்படுகிறது. ரெயில் நிலையங்களில் குறைந்த கால அளவில் நின்று செல்லும் ரெயில்களில் பொதுப்பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் வசதிக்காக இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
உணவைத்தேடி அங்குமிங்கும் பயணிகள் அலைந்து செல்லாத வகையில் பொதுப்பெட்டிகளுக்கு அருகிலேயே நடைமேடைகளில் இந்த விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தெற்கு ரெயில்வே அளவில் 34 ரெயில் நிலையங்களில் இந்த குறைந்த விலை உணவு விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சபாஷ்: இந்திய ரெயில்வே அளவில் 100 ரெயில் நிலையங்களில் 150 விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய முறை விற்பனைக்கு பொதுபெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications