கோயில் நிலத்தை கோர்ட்டுக்கு விற்பதா? மிகப்பெரிய போராட்டம் நடக்கும் ‘ஜாக்கிரதை’.. எச்.ராஜா வார்னிங்!
மதுரை: உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு, அதன் எதிரில் உள்ள கோயில் நிலத்தை விற்கக் கூடாது. அப்படி விற்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா எச்சரித்துள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, "உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு முன் பகுதியில் உள்ள பல ஏக்கர் கோயில் நிலத்தை நீதிமன்ற பயன்பாட்டுக்கு குத்தகைக்கு கேட்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தை நீதிமன்றத்துக்கு விற்பதாக அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

கோயில் நிலங்களை எந்த பொது பயன்பாட்டுக்காகவும் விற்பனை செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற அமர்வு 2018 மற்றும் 2021-ல் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் தி.மு.க அரசு கோவில் நிலங்களை விற்க திட்டமிடுகிறது. கோவில் நிலத்தை விற்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.
கோயில் நிலத்தை உயர் நீதிமன்றத்துக்கு விற்பனை செய்தால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில் நிலங்களையும் விற்பனை செய்யலாம் என நினைக்கின்றனர். கோயில் சொத்துகளை விற்பனை செய்வது, கோயில் நகைகளை உருக்குவது, உண்டியல் பணத்தை கொள்ளையடிப்பது போன்ற நோக்கத்துடன் தமிழ்நாடு முதல்வரும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் செயல்பட்டு வருகின்றனர்.
கோயில் நிலத்தை விற்க அறநிலையத் துறைக்கு உரிமையில்லை. அதை மீறி கோயில் நிலங்களை விற்பனை செய்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு 150 ஏக்கர் நிலம் உள்ளது. இதனால் உயர் நீதிமன்றத்துக்கு மேலும் நிலம் தேவையில்லை." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications