தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்று கூறுவது அரசியல் கட்சி தலைவருக்கு அழகா? ஐகோர்ட் கிளை கண்டனம்
மதுரை: தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்று பொதுவெளியில்
கூறுவது ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கு அழகல்ல என உயர் நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதிகள் அமர்வு இன்று விசாரணை நடத்தியது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்த அஜித் குமார், போலீசார் தாக்குதலில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. உயிரிழந்த அஜித்குமாரின் தம்பி நவீன் குமாருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு சீமான் தலைமையில் ஜூலை 8 ஆம் தேதி போராட்டம் நடத்த நாம் தமிழர் கட்சி போலீசாரிடம் அனுமதி கேட்டது. ஆனால் போலீசார் அனுமதி தரவில்லை. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில், போராட்டத்துக்கு அனுமதி கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நேற்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அமர்வு, வாரம் வாரம் போராட்டம் நடத்துவீர்களா? கடந்த வாரம் போராட்டம் நடத்தியதையே மறைத்துவிட்டு மனுத் தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறீர்களா? என நாம் தமிழர் கட்சியினருக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் போலீசார் விசாரணையில் இளைஞர் உயிரிழந்ததற்கு நாதக சார்பில் திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கண்டதேவி கோவில் தேரோட்ட பாதுகாப்பு பணி காரணமாக சீமான் போராட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க இயலாது என அரசு தரப்பு தெரிவித்தது.
இதையடுத்து, "கண்டதேவி கோயில் தேரோட்டம் நடக்கும் நாளில் போராட்டம் நடத்த அனுமதி கொடுக்கவில்லை என்பதற்காக தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என பொதுவெளியில் ஒரு அரசியல் தலைவர் பேசுவதை நீதிமன்றம் ஏற்காது" எனத் தெரிவித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.
மேலும், "ஒரு அரசியல் கட்சிக்கு போராட, மக்களுக்காக குரல் கொடுக்க உரிமை உண்டு. போராட்டம் நடத்த புதிதாக மனு அளிக்க வேண்டும். அந்த மனுவை காவல்துறை 24 மணி நேரத்துக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்" என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.












Click it and Unblock the Notifications