“வதந்தி பரப்ப மாட்டேன்”.. லெட்டர் கொடுங்க! பாஜக நிர்வாகிக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமின்
தூத்துக்குடியில் 15 நாட்கள் தங்கி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் முன் ஜாமின் வழங்கினார்.
மதுரை: வட மாநில தொழிலாளார்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பியதுபோல் இனி வதந்தி பரப்ப மாட்டேன் என்று உறுதி கடிதம் கொடுக்குமாறு பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை அவருக்கு முன் ஜாமின் வழங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், இந்தி பேசியதற்காக கழுத்தறுத்து கொல்லப்படுவதாகவும் கூறி கடந்த சில வாரங்களாக போலியான வீடியோக்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.
பீகார் மாநில பாஜக ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வதந்தி வட மாநிலங்கள் முழுவதும் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தின. பல முன்னணி வட இந்திய ஊடகங்கள் இதனை செய்தியாக வெளியிட்டன.

வதந்தி பரப்பியவர்கள் கைது
இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது, "புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல் இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் விஷமிகள் சிலரால் பரப்பப்பட்டுள்ளது. அப்படி பொய் செய்தி பரப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

பத்திரிகையாளர்கள் மீது வழக்கு
இது தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153(A), 505(i)(b) கீழ் தெய்னிக் பாஸ்கர் பத்திரிக்கையின் ஆசிரியர் மீது ஒரு வழக்கும், திருப்பூர் மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 153(B), 505(ii(b) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டபிரிவு 56(D) கீழ் தன்வீர் போஸ்ட் என்ற பத்திரிகையின் உரிமையாளர் முகமது தன்வீர் என்பவர் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக நிர்வாகி
அதேபோல, தூத்துக்குடி மாவட்டம் செண்ட்ரல் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153, 153(A), 504, 505(1)(b), 505(1)(c), 505(2) கீழ் பிரசாந்த் உம்ராவ் என்பவர் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இவர்களை கைது செய்ய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரவின் பெயரில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.

போலீஸ் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் இன்றி முழு பாதுகாப்புடன் அமைதியாக வசித்து வருகிறார்கள். அமைதியை சீர்குலைத்து பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பொய் செய்திகளை பரப்புவோர் பற்றிய விவரங்கள் காவல்துறையினரால் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

நிபந்தனை ஜாமீன்
இந்த நிலையில் பாஜக செய்தித்தொடர்பாளர் பிரசாந்த் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி இளந்திரையன் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி இனி இதுபோல் அவதூறு பரப்ப மாட்டேன் என்று உறுதி கடிதம் கொடுக்க வேண்டும் எனவும், தூத்துக்குடியில் 15 நாட்கள் தங்கி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் முன் ஜாமின் வழங்கினார். இதனை மீறினால் முன் ஜாமின் ரத்தாகும் என்றார்.












Click it and Unblock the Notifications