தட்டச்சுத் தேர்வுக்கு இடைக்காலத் தடை! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு! என்ன காரணம்?
மதுரை: தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தட்டச்சு தேர்வு வழக்கம்போல் நடைபெறும் என ஆணையிட்ட தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கும் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்கம் சார்பில் தட்டச்சு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இளநிலை மற்றும் முதுநிலை தட்டச்சு தேர்வு, தாள் - 1, தாள் - 2 என இரண்டு நிலைகளில் தேர்வுகள் நடத்தப்படும்.
இந்தத் தேர்வுகள் கடந்த 75 ஆண்டுகளாக தாள் - 1-ல் ஸ்பீடு தேர்வும், தாள் - 2-ல், ஸ்டேட்மெண்ட் மற்றும் லெட்டர் தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வில் பங்கேற்பவர்கள், குறிப்பிட்ட நேரத்தில் தட்டச்சு செய்து கொடுக்க வேண்டும்.

இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்ட தட்டச்சு தேர்வு அறிவிப்பானது, இளநிலை மற்றும் முதுநிலை தேர்வில், தாள் -1ல் லெட்டர் மற்றும் ஸ்டேட்மெண்ட்டும், தாள்-2ல், ஸ்பீடும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த முறையை ரத்து செய்துவிட்டு, 75 ஆண்டுகளாக நடைபெறும் முறையில், தாள்-1ல் ஸ்பீட் தேர்வும், தாள்-2ல், ஸ்டேட்மெண்ட் மற்றும் லெட்டர் தேர்வும் நடைபெற உத்தரவிடவேண்டும் என சென்னை மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தமிழ்நாடு தட்டெழுத்து, சுருக்கெழுத்து மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி பள்ளிகள் சங்கத் தலைவர் சோமசங்கர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், தமிழகத்தில் பழைய முறைப்படி தாள்-1ல், ஸ்பீடு தேர்வும், தாள் - 2ல் லெட்டர் மற்றும் ஸ்டேட்மெண்ட் தேர்வும் நடைபெறும் என உத்தரவிட்டார். இதனையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து திருச்சி, தட்டச்சு பயிற்சி நிலைய உரிமையாளர் பிரவீன் குமார் என்பவர், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு தாக்கல் செய்தார்.
இந்த மேல்முறையீடு மனு, நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், தமிழகத்தில் தட்டச்சு தேர்வு வழக்கம்போல் நடைபெறும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை, தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்தக்கூடாது எனவும் கூறி, வழக்கை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications