சொத்துக்கள் பத்திரப்பதிவு.. சார் பதிவாளரை கடுமையாக கண்டித்த உயர்நீதிமன்றம்.. பறந்த முக்கிய உத்தரவு
மதுரை: நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சொத்தை பதிவு செய்யக்கோரி முறப்பாடு சார் பதிவாளரிடம் மனு அளித்த தூத்துக்குடியைச் சேர்ந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. . சொத்தின் உண்மை நகல் இல்லை என்று கூறி பதிவு செய்ய சார் பதிவாளர் மறுத்துவிட்டார்.இந்த விவகாரத்தை அடுத்து சார் பதிவாளர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
முறப்பாடு சார் பதிவாளரை கடுமையாக கண்டித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, நீதிமன்ற உத்தரவு இருந்தும் சொத்தின் உண்மை ஆவணங்களை சார் பதிவாளர் கேட்டிருப்பதாகவும், சார் பதிவாளர் மேல்முறையீட்டு நீதிமன்றம் போல் செயல்பட முடியாது. சார் பதிவாளரின் செயல் நீதிமன்ற அவமதிப்பு என்றும் கூறியது.

தூத்துக்குடியைச் சேர்ந்த வி.வரததேசிகாச்சாரியர் செனனை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், "என் சொத்து தொடர்பான வழக்கில் முன்சீப் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் எனக்கு ஆதரவான உத்தரவு வந்திருக்கிறது. எனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுக்கள் எல்லா நீதிமன்றங்களிலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நான், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சொத்தை பதிவு செய்யக்கோரி முறப்பாடு சார் பதிவாளரிடம் மனு அளித்தேன். சொத்தின் உண்மை நகல் இல்லை என்று கூறி பதிவு செய்ய மறுத்து சார் பதிவாளர் 25.6.2024-ல் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்து என் சொத்தை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்" இவ்வாறு தூத்துக்குடியைச் சேர்ந்த வி.வரததேசிகாச்சாரியர் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆயிரம் கே.செல்வகுமார் வாதிட்டார். பின்னர் இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, "நீதிமன்ற உத்தரவு நகல்கள் இருந்தும் சொத்தின் உண்மை ஆவணங்கள் இல்லை என்று கூறி சொத்தை பதிவு செய்ய சார் பதிவாளர் மறுத்திருக்கிறார். சார் பதிவாளரின் இந்த உத்தரவு நீதிமன்றத்துக்கு கீழ்படியாமையே தவிர வேறு ஒன்றும் இல்லை. நீதிமன்ற உத்தரவு இருந்தும் சொத்தின் உண்மை ஆவணங்களை சார் பதிவாளர் கேட்டுள்ளார். இந்த விவகாரத்தில் சார் பதிவாளர் மேல்முறையீட்டு நீதிமன்றம் போல் செயல்பட முடியாது. சார் பதிவாளரின் செயல் நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.
இதே சார் பதிவாளர் எதிர்காலத்தில் இப்படி நடந்தால் நிச்சயமாக நீதிமன்ற அவமதிப்பை சந்திக்க வேண்டியது வரும். சார் பதிவாளர்கள் தன்னிச்சையாக செயல்பட்டு சொத்துகளை பதிவு செய்ய மறுக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவின் அடிப்படையில் பதிவுத்துறை ஐஜி 12.7.2024-ல் சுற்றறிக்கை பிறப்பித்திருக்கிறார்.
அதில் சார் பதிவாளர்கள் இயந்திரத்தனமாக செயல்பட்டு பதிவு செய்ய மறுக்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் மனுதாரரின் சொத்தை பதிவு செய்ய மறுத்து சார் பதிவாளர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஒரு வாரத்தில் சொத்தை பதிவு செய்ய வேண்டும்" இவ்வாறு நீதிபதி என்.சதீஷ்குமார் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications