'ஜெய்ஹிந்த்' என கடைசியில் எழுதியதால் பறிபோன அரசு வேலை.. டிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
மதுரை: டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 தேர்வு விடைத்தாளில் 'ஜெய்ஹிந்த்' என எழுதியதால் விடைத்தாள் செல்லாது என அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் மதுரை உயர்நீதிமன்ற கிளை பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.
கந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின்ஸ் தேர்வு விடைத்தாளில், இயற்கை வளங்களைக் காப்பதன் முக்கியத்துவம் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் முடிவில், 'ஜெய்ஹிந்த்' என குறிப்பிட்டதால் விடைத்தாள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து திண்டுக்கல்லைச் சேர்ந்த கல்பனா என்ற பெண் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், "டிஎன்பிஎஸ்சி குரூப்-2 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 2013-ல் நடந்தது. தமிழ்வழிக் கல்வி பிரிவில் விண்ணப்பித்தேன். அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்று 31.8.2015-ல் நடந்த கலந்தாய்விலும் பங்கேற்றேன். 184 மதிப்பெண் பெற்றதால், என்னை தேர்வு செய்யவில்லை. பிரதான தேர்வின் பகுதி 2 விடைத்தாளை செல்லாது என அறிவித்துள்ளனர். இதனால் எனக்கு வாய்ப்பு பறிபோனது.
குரூப் தேர்வின் பகுதி இரண்டில் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் தொடர்பான கட்டுரையின் இறுதிப் பகுதியில் 'ஜெய்ஹிந்த்.. இயற்கையோடு இணைந்து வாழ்வோம்' எனக் குறிப்பிட்டு எழுதி இருந்தேன். ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இடம்பெற்றதால் விடைத்தாள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால் என்னுடைய பணி வாய்ப்பு பறிபோனது. செல்லாது என அறிவிக்கப்பட்ட விடைத்தாளை மதிப்பீடு செய்து பணி வழங்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பட்டு தேவானந்த், "இயற்கை வளங்களை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. இயற்கை வளங்களைப் பாதுகாப்பதின் முக்கியத்துவத்தை உணர்ந்து மனுதாரர் ஜெய்ஹிந்த் என உணர்ச்சிவசப்பட்டு எழுதியுள்ளார். இதைப் பொறுப்பற்ற பதிலாகக் கருத வேண்டியதில்லை. இதுபோன்ற கட்டுரைகளை எழுதும்போது இளைஞர்கள் உணர்ச்சி வசப்படுவதன் மூலம் தேசபக்தியை உணர முடிகிறது.
ஜெய்ஹிந்த் என்றால் இந்தியாவுக்கு வெற்றி என்று பொருள். 'ஜெய்ஹிந்த்' அல்லது 'வெல்க இந்தியா' என்பது சாதாரணமானதாக பேசப்படுவது தான். பள்ளிக் குழந்தைகளின் பிரார்த்தனையின் முடிவிலோ, முக்கிய பிரமுகர்கள் பேச்சின் இறுதியிலோ இந்த வார்த்தையை கூறுவது வழக்கம். 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையின் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் நேதாஜி, அந்த வார்த்தையை தனது இந்திய தேசிய ராணுவத்தின் போர் முழக்கமாக்கினார். இயற்கை வளங்களை பாதுகாத்தல் தொடர்பான கட்டுரை எழுதும்போது, இளைஞர்கள் உணர்ச்சி வசப்படுவதன் மூலம் அவர்களின் தேசபக்தியை உணர முடியும்.
எனவே, 'ஜெய்ஹிந்த்' என குறிப்பிடப்பட்டிருந்ததால் விடைத்தாளை செல்லாது என அறிவித்தது சட்டவிரோதம். அந்த விடைத்தாளை திருத்தி, மதிப்பெண் வழங்க வேண்டும். பின்னர் பகுதி-1 மற்றும் பகுதி-2ல் மனுதாரர் பெற்ற மதிப்பெண் மூலம் அவர் தேவையான கட்-ஆப் மதிப்பெண் பெற்றிருந்தால், நான்கு வாரங்களில் அவருக்கு பணி வழங்க வேண்டும்" என உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications