தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.. இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்.. தள்ளுமுள்ளு.. திருப்பரங்குன்றத்தில் பதற்றம்
மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால், தீபம் தற்போது வரை ஏற்றப்படவில்லை. இதனை கண்டித்து இந்து அமைப்புகள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டன. இதில் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜிஆர் சுவாமிநதன் உத்தரவிட்டார்.

பிள்ளையார் கோவிலில் தீபம்
இதனையொட்டி நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு உரிய மண்பானை,நெய், காடாத்துணி போன்றவற்றை பிற்பகல் 3.30 மணியளவில் கோயில் பணியாளர்கள் கொண்டு சென்றனர். இதனால் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றுவார்கள் எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் கடந்த ஆண்டை போலஉச்சி பிள்ளையார் கோவில் வளாகத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிலையில் இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம.சீனிவாசன் தலைமையில் அக்கட்சியினர் திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் 16 கால் மண்டபம் அருகே திரண்டு இருந்து கந்த சஷ்டி கவசம் பாடினர்.
பதற்றமான சூழல்
தொடர்ந்து, திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணியினர் மற்றும் போலீசார் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்துமுன்னணியினர், மற்றும் இந்த அமைப்பினர் போலீசாரின் தடுப்புகளை உடைத்து கொண்டு மலையை நோக்கி ஓடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.
போலீசாருக்கு காயம்
நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படவில்லை என்று கூறி இந்து அமைப்புகள் ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டன. தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி முழக்கம் இட்டனர். தடுப்புகளை உடைத்து ஆர்ப்பாட்டாக்கார்கள் செல்ல முயன்றனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒரு காவலர் காயம் அடைந்துள்ளார்.
144 தடை உத்தரவு
இதனை தொடர்ந்து மலை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. போலீசார் தடுப்பை மீறி, மலைப் பாதையில் ஓடிச் சென்றவர்கள் பிடித்து அழைத்து வரப்பட்டனர். திருப்பரங்குன்றத்தில் அசாதாரண சூழல் நிலவுவதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு முறையீடு
இந்த சூழலில், உயர் நீதிமண்ற மதுரைக் கிளை உத்தரவை நிறைவேற்றவில்லை என மதுரை ஆட்சியர், போலீஸ் கமிஷனருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட்டுள்ளது. இதற்கிடையே, சி.ஐ.எஸ்.எப் வீரர்களுடன் சென்று மனுதாரர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுமாறு நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்னை அமர்வில் தமிழ்நாடு அரசு முறையீடு செய்யப்பட்டுள்ளது. நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் முறையீடு செய்ய தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications