Vijay: மனைவியுடனேயே சரியாக கூட்டணி இல்லாதவர் விஜய்! தகுதியில்லாத தலைவன்! அர்ஜுன் சம்பத் விமர்சனம்
மதுரை: தவெக கடையை இழுத்து மூட வேண்டிய நேரம் வந்துவிட்டது, மனைவியுடனே விஜய்க்கு கூட்டணி சரியாக அமைத்துக் கொள்ளாதவர் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் விமர்சித்தார்.
நடிகர் விஜய்யுடன் தனக்கு தனிப்பட்ட பகை ஏதுமில்லை என்று குறிப்பிட்ட அர்ஜூன் சம்பத், ஆனால் அவரது தகுதி குறித்து பல கேள்விகளை முன்வைத்தார். சங்கீதா இலங்கையை பூர்விகமாகக் கொண்ட ஹிந்து குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரை விஜய் மதம் மாற்றியதாகவும் அவர் தெரிவித்தார். மதச்சார்பற்றவர்கள் எனக்கூறுபவர்கள் ஏன் தங்கள் மனைவியை மதமாற்ற வேண்டும் என வினவினார்.

தமது திரைப்பட டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை கண்டுகொள்ளாத விஜய், "லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியைத் தருவேன்" என்று கூறுவது முரண்பாடானது என அர்ஜூன் சம்பத் விமர்சித்தார்.
மேலும், மனைவி விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்றுள்ள நிலையில், மனைவியையும் மக்களையும் அவர் ஏமாற்றுவதாகக் குற்றம்சாட்டினார். தலைமைக்கு தகுதியற்ற விஜய், தனது தவெக கட்சியை மூடிவிட வேண்டிய நேரம் இது என்றும் தெரிவித்தார்.
தி.மு.க. அரசை மிகக் கடுமையாக விமர்சித்த அர்ஜூன் சம்பத், "தி.மு.க. என்பது மூழ்கும் கப்பலா, நீர்மூழ்கிக் கப்பலா, பாயும் கப்பலா, பாய்மரக் கப்பலா" என்பது தெரியவில்லை என்றார். கப்பல், விமானம் உட்பட அனைத்திலும் ஊழல் செய்வதே அவர்களின் வேலை என்றும், ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் கட்சிக்கு வேலை செய்யும் ஊழல் அமைப்பாக மாற்றிவிட்டதாகவும் அவர் சாடினார்.
திமுகவில் உடன்பிறப்புகளுக்கு மரியாதை இல்லை என்றும், தலைவர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டிருப்பதால்தான் அதிமுகவில் இருந்து வருபவர்களை அமைச்சர்களாக்குகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் பதவிக்காகவே தி.மு.க.வுடன் இணைந்துள்ளதாக அர்ஜூன் சம்பத் கூறினார். 'தீய சக்தி'யான தி.மு.க. எந்த வகையிலும் ஆட்சியில் இருக்கக்கூடாது என்பதே எம்.ஜி.ஆரின் நிலைப்பாடு என்றும், அதற்கு நேர்மாறான முடிவை பன்னீர்செல்வம் எடுத்துள்ளார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
கமல்ஹாசன் சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாக விமர்சித்த அர்ஜூன் சம்பத், காந்தியின் பெயரை தனது அரசியல் சுயநலத்திற்குப் பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டார். அறிவாலயம் (திமுக கட்சி தலைமை அலுவலகம்) ஒரு நல்ல 'வாட்ச் மேனாக' கமல் சேர்ந்துள்ளதாகவும், தற்போது அவருக்கு இன்பநிதிதான் முதலாளி என்றும் பகடி செய்தார்.
இந்துக்களின் உரிமைகளைக் காக்கும் நோக்கில், ஹிந்து மக்கள் கட்சி சார்பில் மார்ச் 15 அன்று சென்னையில் 'தமிழ், தமிழர், தமிழகம் மீட்பு மாநாடு' நடைபெற உள்ளது என்பதையும் அர்ஜூன் சம்பத் அப்போது அறிவித்தார்.












Click it and Unblock the Notifications