திருப்பரங்குன்றம் மலை தீபம் வழக்கு: "குன்றில் தீபம் ஏற்றுவோம்" டீ சர்ட் அணிந்து பிரச்சாரம்
மதுரை: திருப்பரங்குன்றம் மலைத் தீபத் தூணில் தீபம் ஏற்றக் கோரி இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர், "குன்றில் தீபம் ஏற்றுவோம்" என அச்சடித்த டி சர்ட்டை அணிந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என பாஜகவை சேர்ந்த ராமரவிக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத் தூணில் விளக்கேற்ற உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி தீபத்திருவிழாவின் போது கோயில் நிர்வாகத்தினர் வழக்கமாக ஏற்றும் உச்சி பிள்ளையார் கோயில் அருகே இருக்கும் தீபத்தில் விளக்கேற்றினர்.
இதனால் திருப்பரங்குன்றத்தில் பாஜக, இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் அங்கிருந்த போலீஸாரின் தடுப்புகளை உடைத்தெறிந்தனர். இந்த நிலையில் ராமரவிக்குமார், கோயில் நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற உள்ளூர் மக்கள், உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெற்று உண்ணாவிரதம் இருந்தனர். வீடுதோறும் தீபம், கொடியேற்றி வழிபட்டு வருகிறார்கள்.
அதே சமயம், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினரும் தீபம் ஏற்ற வலியுறுத்தி பல வகைகளில் பிரச்சாரம் செய்து வருவது மக்களை ஈர்த்து வருகிறது. இந்து முன்னணியினர் கூறுகையில், திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதற்கு பொதுமக்களிடையே எத்தனை ஆதரவு உள்ளது என சமூகவலைதளத்தில் ஓட்டெடுப்பு நடத்தி வருகிறோம்.
நாங்கள் எதிர்பார்த்ததை விட ஆதரவு அதிகரித்து வருகிறது. தவிர, ஒவ்வொருவரும் "குன்றில் தீபம் ஏற்றுவோம்" என அச்சிடப்பட்ட டி-சர்ட்டை அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அது போல் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்களிலும் டிஸ்ப்ளேக்களிலும் "அங்கேயே தீபம் ஏற்றுவோம்" என வாசகத்துடன் கூடிய படங்களை வைத்துள்ளோம். இதை ஒவ்வொருத்தரும் செய்தால்தான் நிச்சயம் முருகன் அருளால் தீபம் ஏற்றும் கட்டாயத்திற்கு திமுக அரசு வரும் என தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications