தீபாவளிக்கு தீபாவளி.. இட்லி கறிக்குழம்பு..கூடவே அம்மா சுட்ட முறுக்கு அதிரசம்
மதுரை: தீபாவளி வந்துருச்சா.. இந்த விசாரணை கிராமப்புறங்களில் அதிகம் இருக்கும். ஐப்பசி மாதம் பொறந்த உடனே தீபாவளி மாசம்தான். துணி எடுக்க வேண்டும்.. பலகாரம் செய்ய வேண்டும்..கறி எடுப்பது எங்கே? எத்தனை கிலோ எடுப்பது என்பது முதல் யோசிக்கத் தொடங்கி விடுவார்கள். 10 மாதங்கள் சேர்த்து வைத்த காசு முழுவதும் தீபாவளிக்கு செலவு செய்பவர்கள் இருக்கிறார்கள். கிராமங்களில் தீபாவளி பண்டிகை எப்படி இருக்கும் இதோ பண்டிகை பற்றி சில சுவாரஸ்ய தகவல்.
வேலைக்காகவும் படிப்புக்காகவும் வெளியூர் சென்றிருப்பவர்கள் தீபாவளிக்காக 4 மாதங்களுக்கு முன்பிருந்தே ரயிலில் புக் செய்து விட்டு பண்டிகை நாளுக்காக காத்திருப்பார்கள். ஒரு சிலரோ புத்தாண்டு காலண்டர் வாங்கிய உடனே தீபாவளி என்றைக்கு வருகிறது என்று பார்த்தவர்களும் இருக்கிறார்கள்.
சொந்த ஊரை விட்டு உற்றார் உறவினர்களை விட்டு வெளியூர்களில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும் பண்டிகையின் அருமை. என்னதான் நகரங்களில் விதம் விதமாக ருசி ருசியாக இனிப்பும் காரமும் விற்பனை செய்தாலும் பண்டிகை நாட்களில் அம்மா செய்யும் முறுக்கு, அதிரசத்திற்கு எந்த பலகாரமும் ஈடாகாது. தீபாவளி முடிந்து ஒருவாரம் ஆன பின்னாலும் அந்த பலகாரங்கள் ரசம் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள வெஞ்சனமாக பயன்படும்.

தீபாவளி எண்ணெய் குளியல்
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து பலகாரம் சாப்பிட்டு கொண்டாடும் பண்டிகையாக இருந்தாலும் கிராமங்களில் தீபாவளி கொண்டாடுவது ஒரு தனி ரகம். தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பாகவே சந்தைகளில் போய் ஆட்டு கிடா வாங்கி வைத்து விடுவார்கள் கறி வியாபாரிகள்.

ஆட்டுக்கறி ஈரல்
யார் யாருக்கு எத்தனை கிலோ கறி வேண்டும் என்று விசாரித்து கணக்கு சேர்த்து தயாரித்து வைத்து கொண்டு அதற்கேற்ப முதல்நாளே சொல்லி வைத்து விடுவார்கள். விடிகாலை 3 மணிக்கு கறி போடுவோம் தயாரா இருக்கணும் என்று சொல்லி வைத்து விடுவார்கள். கொஞ்சம் அசந்தாலும் கறி கிடைக்காமல் போய்விடுமே என்று நினைத்து அலாரம் வைத்து உறங்கி அவசரம் அவசரமாக கறி எடுத்துக்கொண்டு வருவார்கள். கூடவே ஈரல் இருந்தால் நன்றாக இருக்குமே கால் கிலோ எப்படியாவது ஈரல் ஒதுக்குங்க என்று சொல்லி வைத்து வாங்கி செல்வார்கள்.

நல்லெண்ய் குளியல்
விடிய விடிய கறியை அறுத்து கொடுத்து தயார் செய்து சமைக்க கொடுத்து விட்டு அடுப்பில் எண்ணெய் காய வைக்க போய் விடுவார்கள். லேசாக காய்ந்த எண்ணெயை எடுத்து வைத்து ஆறிய உடன் குளிர தேய்த்து ஊற வைத்து சீயக்காய் தேய்த்து குளித்து முடிக்கும் முன்பாகவே கறி வாசம் வந்து விடும். கூடவே ஒரு அடுப்பில் இட்லி ரெடியாகி விடும். மிளகாய் வத்தல், மிளகு சீரகம் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி தயார் செய்த ஈரலும் தயாராகவே இருக்கும்.

சாமிக்கு படையல்
உளுந்த வடை, வெங்காய போன்டா, தேங்காய் சட்னியும் சாமிக்கு தயாராக படையலுக்கு செய்திருப்பார் அம்மா. புத்தாடைகளை சாமி முன்பாக வைத்து கூடவே இனிப்பு கார வகைகளையும், பஜ்ஜி, வடைகள், இட்லி, சட்னி படைத்து சாமி கும்பிட்டு அம்மா தாயே இதே போல குடும்பம் ஒற்றுமையாக சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அம்மாவும் அப்பாவும் வேண்டிக்கொள்வார்கள்.

இட்லி கறி ஈரல்
அப்புறம் என்ன புத்தாடைகளை அணிந்து கொண்டு கறி குழம்பு ஊற்றி இட்லி சாப்பிட ஆரம்பிக்கும் போதே பட்டாசு சத்தம் காதை பிளக்கும். நாமும் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு பட்டாசு விடுவோம் என்பதற்காகவே அவசரம் அவசரமாக அள்ளி விழுங்கி விட்டு கையில் சீனி வேட்டும் பற்ற வைத்த ஊது வத்தி சகிதமாக கோதாவில் இறங்குவோம்.

வெடிக்கும் பட்டாசு
இப்போதும் தீபாவளி பண்டிகை சிறப்பாகவே விலை உயர்ந்த துணிகளை எடுத்து சுவையாக இனிப்புகளை வாங்கி வானத்தில் போய் வெடிக்கும் பட்டாசுகளை வாங்கி வெடித்து கொண்டாடினாலும் 20 ஆண்டுகளுக்கு முன்பு எப்படா தீபாவளி வரும் என்று காத்திருந்து துணி எடுத்து டெய்லரிடம் போய் தைக்க கொடுத்து சில முறை நடையாக நடந்து கடையில் காத்திருந்து துணியை வாங்கி வந்து பெட்டியில் வைத்து அதை எடுத்து பார்த்து அடையும் சந்தோஷம் இப்போது இல்லை.

தீபாவளி திரைப்படங்கள்
ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து பட்டாசு வாங்கினாலும் உறவினர்கள் கொடுத்த காசை சேர்த்து வைத்து பட்டாசு வாங்கி வெடித்த காலத்தில் இருந்த மகிழ்ச்சி போல இப்போது இல்லை என்றே பலரும் முகநூலில் பதிவிடுகின்றனர். சினிமா தியேட்டருக்கு போய் வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கி படம் பார்த்த நாட்கள் இப்போது தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சியுடன் முடிந்து போகிறது.

சொந்த ஊரே சொர்க்கம்
இதோ தீபாவளி வரப்போகிறது. சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் இருந்தும் பலரும் சொந்த ஊரை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து விட்டனர். சொந்த ஊரில் அண்ணன் தம்பிகள்..அக்கா தங்கைகள்..சித்தப்பா, பெரியப்பா என குடும்பத்தை காண செல்லத் தொடங்கி விட்டனர். பேருந்திலும் ரயிலிலும் எத்தனை கூட்டம் இருந்தாலும் அடித்து பிடித்து சொந்த ஊருக்கு கிளம்பி விட்டனர். சொந்த ஊரில் பண்டிகை கொண்டாடுவதுதான் சொர்க்கம். இனி பட்டாசு சத்தம் பட்டையை கிளப்பும்..உங்க ஊர் தீபாவளி எப்படி இருக்கும்? எங்களுக்கு எழுதுங்களேன்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications