காவல் சித்ரவதைகளை ஒழிக்க வேண்டும்! மதுரையில் அணி திரண்ட மனித உரிமை செயற்பாட்டாளர்கள்!
மதுரை: காவல் சித்ரவதைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதற்காக மதுரையில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து கருத்தரங்கம் நடத்தியுள்ளனர்.
அதில் காவல் விசாரணை, கைது உள்ளிட்ட விவகாரங்களின் போது போலீஸார் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற 41 வழிகாட்டு நெறிமுறைகளை பதாகை மூலம் வெளியிட்டனர்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

காவல் சித்ரவதை
காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோர்க்கான ஐ.நா.வின் சர்வதேச ஆதரவு நாள் கருத்தரங்கம் மதுரையில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் நடைபெற்றது. அதில், காவல் விசாரணை, கைது குறித்து தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு சுற்றறிக்கை மூலம் வெளியிட்ட 41 வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய பதாகையை மூத்த வழக்கறிஞர் மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன் வெளியிட்டார்.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஷாஜி செல்லன் அவர்கள் பேசும் போது, ''உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அனைத்துக் காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமரா இருக்க வேண்டும், காவல் நிலையத்தின் நுழைவு வாயில், வெளியேறும் வாயில், கைதி அறையின் வெளிப்பகுதி, வராண்டா, வரேற்பறை, காவல் ஆய்வாளர் அறை, சார்பு ஆய்வாளர் அறை, காவல்நிலைய சுற்று பகுதி, காவல் நிலைய பின் பகுதி ஆகிய இடங்களில் சிசிடிவி கேமரா இருக்க வேண்டும். இரவிலும் தெளிவாக ஒளிப்பதிவு செய்யும் தொழில்நுட்பத்துடன் கேமரா இருக்க வேண்டும். அதன் பதிவானது குறைந்தது 18 மாதங்களாவது பாதுகாக்கப்பட வேண்டும்'' என்று விரிவாக எடுத்துரைத்தார்.

ஜவாஹிருல்லா பேச்சு
சிறப்புரையாற்றிய மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பேசும் போது, "சித்திரவதையை செய்பவர்கள் காவல்துறையினர், பாதிப்படைபவர்கள் பாமரமக்கள் என்று நாம் நினைத்தால் அது தவறு. இன்றைய இந்தியாவில் அரசின் தவறைச் சுட்டிகாடுபவர்கள் அரச பயங்கரவாதத்தால், கொடுங்கோன்மையால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் வாழும் உரிமை கேள்விக்குறியாக உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வழக்கு தொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தியாவின் எதிர்காலம் கவலைக்குரியதாக உள்ளது.''

புல்டோசர்கள்
''புல்டோசர்களைக் கொண்டு அரசு வீடுகளை இடிக்கவில்லை, இந்திய அரசமைப்புச் சட்டத்தையே இடிக்கிறார்கள். நாம் வாழக்கூடிய மதச்சார்பற்ற இந்தியாவின் முச்சந்தியில் நின்று கொண்டிருக்கிறோம். மிகவும் மோசமான ஒரு சூழலில் இருக்கிறோம். எனவே காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டமைப்பு தமிழக எல்லைகளைத் தாண்டி செயற்பட வேண்டிய தேவை உள்ளது" என்று குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பேசிய அனைவரும் சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கையை இந்தியா ஏற்புறுதி செய்ய வேண்டும். சித்திரவதையற்ற உலகு படைக்க அனைவரும் இணைந்து செயலாற்றுவோம்'' என்று வலியுறுத்தினர்.












Click it and Unblock the Notifications