Sellur Raju: என் மகனையும் சாலை விபத்தில் இழந்தேன்.. பாதுகாப்பா இருங்க.. செல்லூர் ராஜு உருக்கம்
Recommended Video
மதுரை: நானும் சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவன்தான். என் மகனை ஒரு சாலை விபத்தில் பறி கொடுத்தவன் என்று அமைச்சர் செல்லூர் ராஜு உருக்கமாக பேசினார்.
மதுரை மாநகர காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் மதுரை மாநகர் முழுவதும் ஒவ்வொரு வாரமும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு படக்காட்சிகள் உள்ளடக்கிய நிகழ்வுகள் மதுரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய ஒவ்வொரு இடத்திலும் நடைபெறுவது வழக்கம்.
இதன் ஒரு பகுதியாக நேற்றுமதுரை எம்ஜிஆர் விளையாட்டு மைதானத்தில் சாலை பாதுகாப்பு விடுமுறை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு விழா பேருரையாற்றினார்.
தொடர்ந்து பேசிய அவர், மது போதையினால் பல்வேறு விபத்துகள் நடைபெற்று கொண்டேதான் இருக்கிறது. இதன் மூலமாக விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோய் கொண்டு வருகின்றது. இதனால் ஒரு இழப்பை சந்தித்த குடும்பத்தாரும் உற்றார் உறவினரும் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பது நமக்கு தெரிந்த ஒன்று.
சாலை விழிப்புணர்வு குறித்து நாம் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும். சாலை விதிகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். 6 ஆண்டுகளுக்கு முன்பு எனது ஒரே மகன் சாலை விபத்தில் இறந்து போனான். மரணத்தின் போது அந்த குடும்பம் மற்றும் அவரது உறவினர்கள் பாதிக்கப்படுகிறது.
என் மகன் இறந்து ஆறு ஆண்டுகள் ஆகியும் இன்னும் அந்த நினைவுடன் இருக்கிறோம். நானும் எனது மனைவியும் இறக்கும் வரை இந்த நினைவுகள் இருக்கும் என்றார் அமைச்சர் செல்லூர் ராஜு.
சாலை விபத்தில் மரணம் அடைந்த அமைச்சரின் மகன் தமிழ்மணி ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்தில் சிக்கி மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது