அந்த நபரால் நான்கரை ஆண்டு காலம் நான் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.. எடப்பாடி பழனிசாமி வேதனை!
மதுரை: நான்கரை ஆண்டு காலம் ஆட்சியை நடத்துவதற்கு மிகவும் துன்பப்பட்டேன். கட்சியை விட்டுச் சென்ற நபரை அதிமுகவில் வைத்துக் கொண்டு நான் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வரும் லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி அமைக்கும் முயற்சிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. நெல்லை முபாரக்கின் எஸ்டிபிஐ கட்சி, அதிமுகவுடன் கூட்டணி அமைக்கிறது. மதுரை வண்டியூரில் எஸ்டிபிஐ கட்சியின் மதச்சார்பின்மை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். மாநாட்டு மேடைக்கு திறந்த வெளி வாகனத்தில் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "நான் முதலமைச்சராக ஆவேன் என கனவில் கூட நினைக்கவில்லை. அதிமுகவில் நான் கொஞ்சம் கொஞ்சமாக தவழ்ந்து தவழ்ந்து உயர் பதவிக்கு வந்துள்ளேன். என்னுடைய வளர்ச்சியை ஸ்டாலின் கொச்சைப்படுத்தி பேசுகிறார். அவருக்கு உழைப்பென்றால் என்னவென்று தெரியாது, நான் கடுமையாக உழைத்து கட்சிக்கு கிளைச் செயலாளரிலிருந்து பொது செயலாளராகவும், ஆட்சிக்கு முதலமைச்சராகவும் வந்தேன்.
ஆனால் மு.க.ஸ்டாலின் கருணாநிதியால் முதலமைச்சராகவும் திமுக தலைவராகவும் வந்துள்ளார். நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படாமல் வீட்டு மக்களைப் பற்றி கவலைப்படும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். திமுக எங்களைப் பார்த்து அடிமை எனக் கூறுகிறது. நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை. நாங்களும் யாரையும் அடிமைப்படுத்தவில்லை.
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வந்ததை முதலமைச்சர் ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கூட்டணியில் இருந்து வெளியே வந்த போதிலும் முதலமைச்சர் ஸ்டாலின் அதிமுகவையும், பாஜகவையும் தொடர்புபடுத்தி பேசி வருகிறார். மத்தியில் ஆட்சி அதிகாரத்துக்கு வர வேண்டும் என திமுக ஒரு கூட்டணி அமைத்துள்ளது, திமுக மக்களை பற்றி கவலைப்படவில்லை, குடும்பத்தினருக்காகவே கூட்டணி.
நான்கரை ஆண்டு காலம் ஆட்சியை நடத்துவதற்கு மிகவும் துன்பப்பட்டேன். கட்சியை விட்டுச் சென்ற நபரை அதிமுகவில் வைத்துக் கொண்டு நான் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. அதிமுகவுக்கு எதிராக வாக்களித்த போதும் அதிமுக ஆட்சி நிலைத்து நின்றது. நமக்கு எதிராக வாக்களித்தவரையும் சமாளித்து தான் அதிமுக ஆட்சி நான்கரை ஆண்டுகள் நடைபெற்றது" எனப் பேசினார் எடப்பாடி பழனிசாமி.
11 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் இருந்த நான், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்திருந்தால், அன்றைக்கே ஆட்சி போயிருக்கும். நான் ஆதரவு கொடுத்ததால் ஆட்சியும், கட்சியும் காப்பாற்றப்பட்டது என ஓ.பன்னீர்செல்வம் பேசி வருகிறார். இந்நிலையில் தான், நான்கரை ஆண்டு கால ஆட்சியை நடத்தவே ஓபிஎஸ்ஸால் தான் துன்பப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications