கல்வெட்டு ஆய்வாளர் பொ.ராசேந்திரன் மறைவு.. கடைசி மூச்சு வரை தமிழர் பெருமையை வெளிக்கொணர பாடுபட்டவர்!
மதுரை: மூத்த கல்வெட்டு ஆய்வாளர் பொ.ராஜேந்திரன் உடல்நலக் குறைவால் நேற்று இரவு காலமானார். தமிழக தொல்லியல் துறையில் கல்வெட்டு பயிற்சித்துறையின் முதல் பேட்ச் மாணவரான பொ.ராஜேந்திரன், தொல்லியல் துறையில் 30 ஆண்டுகளுக்குப் மேலாக பல்வேறு பதவிகளில் பணியாற்றியவர். அவரது மறைவுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு இரங்கல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் கல்வெட்டு ஆய்வாளர் பொ.ராசேந்திரன் (71). பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பிஎஸ்சி விலங்கியல் படித்த ராசேந்திரன், தமிழ் மீது கொண்ட ஆர்வம் காரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் இலக்கியம் பயின்றார்.

1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழக தொல்லியல் துறையில் கல்வெட்டு பயிற்சித்துறையின் முதல் பேட்ச் மாணவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு கல்வெட்டு மற்றும் தமிழ் மொழி மீதான ஆர்வம் காரணமாக தமிழக தொல்லியல் துறையில் கல்வெட்டு ஆய்வாளராகக் கடந்த 1977ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.
அரிட்டாபட்டி தமிழ்க் கல்வெட்டுகள் குறித்தும், குடுமியான்மலையில் தமிழ்க் கல்வெட்டுகள் தரும் தகவல்களையும் முதன்முதலாக வெளிக் கொணர்ந்தவர் பொ.ராஜேந்திரன். குறிப்பாக பூம்புகாரில் எஸ்.ஆர் ராவ் தலைமையிலான கடல் அகழாய்வில் தமிழக தொல்லியல் துறையின் சார்பாக முதன் முதலில் கலந்து கொண்ட பெருமைக்குரியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக தொல்லியல் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்த பொ.ராஜேந்திரன் கடந்த 2009ஆம் ஆண்டு உதவி இயக்குநராகப் பணி நிறைவு பெற்றார். தனது பணிக்காலத்தில் 25 ஆண்டுகள் தஞ்சாவூர் மாவட்டங்களில் பல்வேறு தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். மேலும், பணி ஓய்வுக்குப் பிறகு தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கத்துடன் இணைந்து பாண்டி நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தை உருவாக்கி அதன் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தார்.
தொடர்ச்சியாக கல்வெட்டியல் துறையில் ஆய்வுகளை மேற்கொண்டு வந்த பொ.ராசேந்திரன், இளம் தலைமுறை ஆய்வாளர்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாகவும் விளங்கினார். இந்நிலையில் தனது 71 வயதில் நேற்று காலமானார். அவரது மறைவு, தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் துறையினர், தமிழ் அறிஞர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்வெட்டு ஆய்வாளர் பொ.ராசேந்திரன் மறைவுக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவரும், தொல்லியல் அறிஞருமான பொ.இராசேந்திரன் அவர்கள் உடல் நலக் குறைவினால் காலமானார் என்ற செய்தி கேட்டு பெரிதும் வருந்துகிறேன்.
தன்னுடைய உயர்ந்த பங்களிப்பினால் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தை சிறப்பாக வழி நடத்தி, தன் இறுதி மூச்சு வரை நூலாக்கப் பணிகளில் ஈடுபட்டு தொண்டாற்றிய பெருமகனார். அவரது மறைவு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும், தொல்லியல் ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications