"ஓபிஎஸ் எதிராக பல OPSகள்!" நொடியும் யோசிக்காமல் எடப்பாடி தந்த பதில்! என்ன இப்படி சொல்லிட்டாரு
மதுரை: ராமநாதபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்துடன் சேர்த்து அதே பெயரில் மொத்தம் 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், இது குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி சுவாரசியமான பதிலைக் கொடுத்து இருக்கிறார்.
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நடந்த நிலையில், நேற்றைய தினம் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.

எப்போதும் தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக இடையே தான் போட்டி இருக்கும். ஆனால், இந்த முறை இந்த கூட்டணி உடன் பாஜகவும் தனது தலைமையில் கூட்டணியை உருவாக்கி இருக்கிறது.
ஓபிஎஸ்: தமிழகத்தில் தனது தலைமையில் பாஜக ஒரு கூட்டணியை உருவாக்கி உள்ளது. இதில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக, ஓபிஎஸ் அணி உள்ளிட்டோர் இடம் பெற்று உள்ளனர். இதில் ஓபிஎஸ் தரப்பு பாஜக கூட்டணியில் ஒரு இடம் ஒதுக்கப்பட்ட நிலையில், அவர் ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார். அதிமுகவை மீட்கவே தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை நிரூபிக்க ஒரே ஒரு தொகுதியில் மட்டும் ஓபிஎஸ் களமிறங்குகிறார்.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமநாதபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், அதன் பிறகு தான் ஓபிஎஸுக்கு மிகப் பெரிய தலைவலி ஏற்பட்டது. அதாவது ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரிலேயே வரிசையாகப் பலரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஓபிஎஸ் தாக்கல் செய்த நாளன்று ஓ பன்னீர்செல்வம் என்ற பெயரில் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அடுத்த நாள் மேலும் மூன்று பேர் தாக்கல் செய்தனர்.
களத்தில் 5 ஓபிஎஸ்கள்: இதன் மூலம் ராமநாதபுரம் தேர்தல் களத்தில் இப்போது 5 ஓபிஎஸ்கள் உள்ளனர். பொதுவாகத் தேர்தலில் ஒரே பெயரில் இரண்டு வேட்பாளர்கள் இருப்பது சகஜம் தான். ஆனால் இங்கே இனிஷியல் கூட ஒரே போல இருக்கும் பலர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஓபிஎஸுக்கு அதிக வாக்குகள் கிடைக்கக்கூடாது என்பதற்காக எடப்பாடி தரப்பே இப்படிச் செய்வதாகப் புகார்கள் எழுந்தன. இதற்கிடையே இது தொடர்பான கேள்விக்கு எடப்பாடி பழனிசாமியே நேரடியாகப் பதிலளித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி: மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "இது சுதந்திர நாடு.. இங்கே ஓ பன்னீர்செல்வமும் ஒன்று தான். நானும் ஒன்றுதான்.. அனைத்து வேட்பாளர்களும் ஒன்று தான். நமது நாடு ஜனநாயக நாடு. இங்கே இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று இல்லை.. மக்கள் யாரைப் பெரியவர் என நினைக்கிறாரோ.. அவர்களே பெரியவர்கள்.
களத்தில் ஐந்து ஓ பன்னீர்செல்வம் நிற்கிறார்களே என்று கேட்கிறீர்கள். அப்போ மற்றவர்கள் என்ன தகுதி இல்லாதவர்களா.. அவர்கள் தகுதி இருப்பதால் களத்தில் நிற்கிறார்கள் ஓபிஎஸை நீக்கும் முடிவு தொண்டர்கள் எடுத்த முடிவு.. அதிமுகவில் உள்ள 2 கோடி தொண்டர்கள் சேர்ந்து எடுத்த முடிவு. அது எடப்பாடி பழனிசாமி முடிவு இல்லை. ஒட்டுமொத்தமாக அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் எடுத்த முடிவு தான் அது" என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications