நேரில் வந்த நிகிதா.. வீட்டில் தானே இருக்கேன்? அந்த அதிகாரி எனக்கு உறவா? திண்டுக்கல் பேராசிரியை பரபர
மதுரை: சிவகங்கை மாவடடம் மடப்புரம் கோயில் அருகே நகை திருட்டு நடந்ததாக புகார் தெரிவித்த நிகிதா, அஜித்குமார் விவகாரத்தில் என்ன நடந்தது என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் உயரதிகாரிகள் யாரும் எங்களுக்கு உறவினர்களாக இல்லை என்றும் தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் தான் தலைமறைவாகவில்லை என்றும், வீட்டில் தான் இருக்கிறேன் என்றும் நிகிதா கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோவிலில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் 28 வயதாகும் அஜித்குமார். இவரை காரில் தங்க நகைகள் மாயமான புகாரில் சந்தேகத்தின் பேரில் திருப்புவனம் தனிப்படை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் தனிப்படை போலீசார் தாக்கி விசாரித்த போது காவலாளி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல்வர் ஸ்டாலின் பதில்
இதுபற்றி விளக்கம் அளித்த முதல்வர் ஸ்டாலின், "சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த ஜூன் 28-ம் தேதி வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். விசாரணையின்போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அவரது இறப்புக்கு காரணம் என்பதை அறிந்ததும் நான் மிகவும் வேதனையடைந்தேன். இது யாராலும் நியாயப்படுத்தப்பட முடியாத, காரணம் சொல்லித் தப்பிக்க முடியாத செயல்.
6 காவலர்கள் கைது
இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 6 காவலர்கள் சம்பவம் நடந்த அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இத்தகைய வழக்குகளில் பின்பற்றப்பட வேண்டிய சட்ட நடைமுறைகளின்படி, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று முன்தினம் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.
எஸ்பி இடமாற்றம்
சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். துணை கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இப்படி சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. துயர மரணத்தை அடைந்துள்ள அஜித்குமார் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசினேன். நடைபெற்ற துயரச் சம்பவத்துக்கு எனது வருத்தத்தை அவர்களிடம் தெரிவித்தேன். நியாயமான, ஒளிவுமறைவற்ற, எவ்வித பாரபட்சமுமற்ற விசாரணை மேற்கொள்ளப்படும். இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், அஜித்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் உறுதியளித்துள்ளேன்" இவ்வாறு கூறியிருந்தார்.
ஐஏஎஸ் அதிகாரியுடன் தொடர்பு
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்த போது, அதிமுக வழக்கறிஞர் அணி மாநில இணைச் செயலாளரான வழக்கறிஞர் மாரீஸ்குமார் வாதிடுகையில், "இந்த வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்" என்று குற்றம்சாட்டினார். அப்போது உயர் நீதிமன்றமும், அஜித்குமாரை விசாரணைக்காக வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்ல யார் காவல்துறையினருக்கு அதிகாரம் கொடுத்தது? சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத் உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டதற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பி இருந்தது.
வக்கீல் பேட்டி
இதனிடையே மடப்புரத்தில் நிகிதா மற்றும் காவலாளி அஜித்குமார் இடையே நடந்த பிரச்சனை குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் அளித்த பேட்டி வெளியாகியது. அதில் அவர் கூறுகையில், சம்பவம் நடந்த அன்று சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோவிலில் சக்கர நாற்காலியை எடுத்து வந்து, கோவில் வளாகம் முழுவதும் சிவகாமி அம்மாளை அழைத்துச்செல்ல தனக்கு ரூ.500 தர வேண்டும் என அஜித்குமார் கேட்டாராம். அதற்கு நிகிதா ரூ.100 தருவதாக கூறினாராம். பின்னர் பேரம் பேசியதில் ரூ.200 தருவேன் எனக்கூறினாராம். ஆனால், ரூ.500 தர வேண்டும் என அஜித்குமார் கேட்டதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாம்.
நகை திருட்டு புகார்
அதனாலேயே நகை திருட்டு என அஜித்குமார் மீது போலீசில் நிகிதா கூறியதுடன், தனக்கு தெரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு நகை திருட்டு போனதாக தெரிவித்த தகவலால் போலீசாருக்கு மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாம். அதனால் மானாமதுரையில் இருந்து வந்த தனிப்படை போலீசார் அஜித்குமாரை நகையை கேட்டு அடித்துக்கொன்றார்கள் " என்று அந்த வக்கீல் பேட்டியில் குற்றம்சாட்டியிருந்தார்.
அஜித்குமாருடன் வாக்குவாதம்
இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்த நிகிதா, நான் தலைமறைவானதாக கூறுகின்றனர். நான் என்னுடைய வீட்டில்தான் இருக்கிறேன். விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். அஜித்குமார் இறந்ததில் நானும், எனது தாயாரும் வேதனையில் இருக்கிறோம். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளி கோயிலில் காரை பார்க்கிங் செய்வதற்கு முன்பு எனது தாயாருக்கு சக்கர நாற்காலியை எடுத்து வந்த காவலாளி அஜித்குமார் ரூ.500 கேட்டார். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
உயர் அதிகாரிகள் உறவினர்களாக இல்லை
பின்னர், கடைசியாக ரூ.100 தான் நான் கொடுத்தேன். மற்றபடி அதற்கும், நான் அளித்த புகாருக்கும் எந்த சம்பந்தமில்லை. கோயிலுக்குச் சென்றுவிட்டு ஸ்கேன் மையத்துக்குச் செல்லவிருந்தோம். அதற்காகத்தான் ஏற்கெனவே பையில் கழற்றி வைத்திருந்த தங்க நகைகளை காரில் வைத்திருந்தோம். அது காணாமல் போனதால் , புகார் கொடுத்தோம். உயர் அதிகாரிகள் யாரும் எங்களுக்கு உறவினர்களாக இல்லை. மற்றபடி என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை" இவ்வாறு நிகிதா கூறியுள்ளார்.
யார் இந்த நிகிதா
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயபெருமாள்.இவரது மனைவி சிவகாமி அம்மாள். இந்த தம்பதியின் மகள் தான் நிகிதா, முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார். இவர் திண்டுக்கல்லில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். முன்னதாக வேலைவாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக நிகிதா மீது உள்ள வழக்குகள் உள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகிறது. பலரும் சமூக வலைதளங்களில் கோவிலில் நடந்ததை வைத்து யூகத்தின் அடிப்படையில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். அதேநேரம் உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து காவல்துறையே விளக்கம் அளித்தால் தான் உண்மை என்னவென்று தெரியவரும். சர்ச்சையும் முடிவுக்கு வரும்.












Click it and Unblock the Notifications